” தேசத்துரோக நடவடிக்கையில் ஈடுபடும் ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபை உடன் பதவி விலக வேண்டும்.” – என்று வலியுறுத்தியுள்ளார் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஶ்ரீலங்கா கிரிக்கெட்சபை, விளையாட்டுதுறை அமைச்சின் அனுமதியை பெறாமல் பல நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சின் அனுமதியின்றிதான் எல்பிஎல்கூட நடத்தப்பட்டது.
விளையாட்டுக்கழகங்கள், தெரிவுக்குழு உள்ளிட்டவை சுயாதீனமாக செயற்பட நாம் இடமளித்துள்ளோம். ஆனால் சர்வதேசத்துக்கு சென்று அரசியல் அழுத்தம் என கிரிக்கெட் சபை கூறுகின்றது. இது தேசத்துரோக நடவடிக்கையாகும். தமது ஊழல், மோசடிகளை மூடிமறைப்பதற்காகவும், தமது இருப்புக்காகவுமே கிரிக்கெட் சபை சர்வதேசத்துக்கு பொய்யுரைக்கின்றது.
எனவே, கிரிக்கெட் சபை உடனடியாக பதவி விலக வேண்டும். நான் ஐசிசி ஐ மதிக்கின்றேன். ஐசிசிக்கு கடிதம் எழுதியுள்ளேன். அங்கத்து நாடுகளுக்கும் எழுதவுள்ளேன். காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவற்றை வெளிப்படையாக கூறமுடியாது.” – என்றார்.










