வடக்கின் தலைவர்கள் கிழக்கின் தனித்துவத்தையும் பாதுகாத்து உண்மையான இணக்கப்பாட்டோடு தெளிவான அரசியல் தீர்வு ஒன்றை முன்வைத்தால் அத்தகைய நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
கிழக்கு மக்களையும் இணையாக நடத்தக்கூடிய திட்டத்துடன் தெளிவான அரசியல் தீர்வோடு பயணிப்பதற்கான திட்ட வரைபை அவர்கள் எமக்கு முன்வைத்தால் அவ்வாறான தீர்வு முயற்சிக்கு நாம் நிச்சயம் தடையாக இருக்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.
நம்பிக்கை தரக்கூடிய தீர்வுகளை தெளிவான பார்வையோடு சிங்கள மக்களுக்கு நாம் முன் வைக்க வேண்டும்.
சிங்கள மக்களோடும் சிங்கள தலைவர்களோடும் பேச வேண்டுமெனக்கூறிக்கொண்டு கடந்த காலகசப்பான அனுபவங்கள் அதனூடான வெறுப்புக்களை வெளியிட்டு வருவதை தவிர்க்க வேண்டும்.
அத்துடன் மோசமான வார்த்தைகளினால் உணர்வுகளைத் தட்டி எழுப்பிப் பேசி சிங்கள மக்கள் மத்தியில் காயங்களை ஏற்படுத்தவும் கூடாது .
தென்பகுதியின் எழுச்சிக்கு முகம் கொடுக்கக்கூடிய சூழலை உருவாக்க வேண்டுமென்றால் இப்போதிருக்கின்ற நிலையிலிருந்து விடுபட்டு மாற்று சிந்தனையை பரிசீலிப்பதற்கு தயாராக உள்ளதாகவும் அவர் சபையில் தெரிவித்தார்.










