கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்ட 7 வயது சிறுவன் -அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை

7 வயது சிறுவன் ஒருவன் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு பாரிய காயங்களுடன் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

தனது தந்தைக்கு அலைபேசி மீள் நிரப்பும் (ரீலோட்) அட்டையொன்றை கொள்வனவு செய்ய கடைக்குச் சென்ற சிறுவன் ஒருவனே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

நேற்று (31) மாலை 6 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், கந்தகெட்டிய- களுகஹகதுர என்ற கிராமத்தைச் சேர்ந்த சிறுவனே காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவனுக்கு விசேட வைத்திய நிபுணர்கள் ஐவர் அடங்கிய  குழுவொன்று சத்திரசிகிச்சையை முன்னெடுத்துள்ளதுடன், சிறுவன் தற்போது அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த சிறுவனின் தந்தை, தான் பிள்ளையின் கையில் 100 ரூபாயைக் கொடுத்து மீள் நிரப்பும் அட்டையை கொள்வனவு செய்து வருமாறு கூறியதாகவும் தெரிவித்தார்.

கடைக்குச் செல்லும் வீதி மிகவும் சிறியது. இரண்டு புறங்களிலும் காடுகள் உள்ளதாகத் தெரிவித்த அவர்,  மகன் கடைக்குச் சென்று 5 நிமிடங்களில் சத்தமிட்டார்.நாங்கள் பாம்பு ஏதும் தீண்டிவிட்டதா என பயந்து ஓடினோம்.

அப்போது தமது வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் நபர் ஒருவர் அங்கிருந்து ஓடியதை அவதானித்தோம் என்றார்.

தனது மகன் கடைக்குச் செல்ல முன்னர்  சந்தேகநபர் தம்  வீட்டுக்கு வந்துவிட்டு சென்றதாக  தந்தை தெரிவித்துள்ளார்.

பின்னர் காயமடைந்த மகனை மீகஹகிவுல வைத்தியசாலைக்கு கொண்டு சென்று. அங்கிருந்து பதுளை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம் என்றார்.

51 வயதான சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்  பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles