கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் உல்லாசப் படகு கவிழ்ந்ததில் 22 பேர் பலியானார்கள். 20 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். , அதில் 6 பேருக்கு பெரியளவில் பாதிப்பு இல்லை. மற்றவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் தானூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஓட்டும்புறம், தூவல் தீரம் என்ற இடத்தில் சுற்றுலா பயணிகள் கடலில் உல்லாச பயணம் செய்து வருவது வாடிக்கையானது. அவ்வாறு சுற்றுலா வந்த இடத்தில் ஈரடுக்கு உல்லாசப் படகில் சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்க்கச் சென்ற போது இந்த விபத்து நேரிட்டுள்ளது.
விபத்து நேரிட்டதும், மீட்புப் படையினருடன் உள்ளூர் மக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்துக்குள்ளான படகை வெட்டி மக்கள் வெளியே கொண்டு வந்தனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தனூர், திரூர் தீயணைப்புத் துறையினர், காவல்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத் துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர்கள் பிஏ முஹம்மது ரியாஸ் மற்றும் வி அப்துர் ரஹ்மான் ஆகியோர் மீட்பு பணியை ஒருங்கிணைத்து வருகின்றனர்.
மீட்பு பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் இணைந்துள்ளனர். இந்த விபத்தில் இதுவரை 22 இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதில் 6 குழந்தைகள் 3 பெண்கள் அடங்குவர். 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் 6 பேர் நலமுடன் இருப்பதாகவும், மீதமுள்ளவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில், சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.










