கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் அடுத்த முறை நிறைவேறும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ நம்பிக்கை வெளியிட்டார்.
கொழும்பு மாநகரசபை முடிவானது முழு நாட்டுக்கும் தாக்கம் செலுத்தப்போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டமை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் அது மீள முன்வைக்கப்படும். நிலைமை இவ்வாறு இருக்கையில் கொழும்பு மாநகரசபை இனி எங்கள் வசம் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் எம்.பி. கூறுகின்றார். உள்ளாட்சிசபைத் தேர்தல் சட்டத்தில் அவ்வாறு எவ்வித ஏற்பாடும் இல்லை.
விரைவில் மீண்டும் வரவு- செலவுத் திட்டம் முன்வைக்கப்படும். அதனை நிறைவேற்றுவதற்கு எதிரணி ஒத்துழைப்பு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.”- என்றார்.
