கௌதம புத்தரின் போதனைகளைப் பின்பற்றி இந்தியா முன்னேறி வருகிறது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், புது டெல்லியில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமான உலகளாவிய பௌத்த உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, கௌதம புத்தரின் உன்னத போதனைகளை எடுத்துரைத்தார்.
“கௌதம புத்தரின் உன்னத போதனைகள் பல நூற்றாண்டுகளாக எண்ணற்ற மக்களை செம்மைப்படுத்தியுள்ளது. புத்தபெருமானின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு, உலக நலனுக்காக இந்தியா புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது” என்று பிரதமர் மோடி கூறினார்.
“புத்தர் என்பது நபருக்கு அப்பாற்பட்ட ஒரு புரிதல், புத்தர் என்பது வடிவத்திற்கு அப்பாற்பட்ட ஒரு சிந்தனை, புத்தர் உருவத்திற்கு அப்பாற்பட்ட ஒரு உணர்வு, மேலும் புத்தரின் இந்த உணர்வு நித்தியமானது மற்றும் நிலையானது, இந்த எண்ணம் நித்தியமானது, இந்த புரிதல் மறக்க முடியாதது” என்று பிரதமர் மோடி கூறினார்.
இந்தியப் பிரதமர் மேலும் கூறுகையில், ‘அமிர்த காலில்’ இந்தியா ஒரு வளர்ந்த நாடாக முன்னேறி வருவதாகவும், அதற்குப் பின்னால் உள்ள மிகப்பெரிய உத்வேகம் புத்த பகவான் என்றும் கூறினார்.
“இந்த அமிர்த காலில், இந்தியா பல விடயங்களில் புதிய முயற்சிகளை எடுத்துள்ளது, இதற்கு எங்களின் மிகப்பெரிய உத்வேகம் கௌதம. இந்தியாவின் முன்னேற்றம் மட்டுமன்றி, முழு உலகத்தின் நலனுக்காகவும் இந்தியா உழைத்து வருகிறது.” என்று மோடி கூறினார்.
“வெற்றி, தோல்விகள், சண்டைகள், போர்கள் ஆகியவற்றின் உணர்வைத் துறந்தால் மட்டுமே நாம் மகிழ்ச்சியைத் தழுவ முடியும். புத்தபெருமான் இவற்றைக் கடக்கும் வழியைக் கற்றுக் கொடுத்துள்ளார். பகைமை அன்பினால் ஒழியாது. உண்மையான மகிழ்ச்சி அமைதியில், அமைதியுடன் வாழ்வதில் உள்ளது.” என்று மோடி தெரிவித்தார்.
உலகம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால், கௌதம புத்தரின் போதனைகளைப் பின்பற்ற வேண்டும். உலகம், குறுகிய சிந்தனையை விட்டு வெளியேறுவதற்கான ஒரே வழி இதுதான்.” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
ரஷ்யா-உக்ரைன் போரை மையப்படுத்தியே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
“கௌதம புத்தரின் பாதை எதிர்காலத்தின் பாதை. நிலைத்திருக்கும் பாதை. புத்தரின் போதனைகளை உலகம் பின்பற்றியிருந்தால், பருவநிலை மாற்றம் போன்ற நெருக்கடி கூட வந்திருக்காது. இவற்றை பின்பற்றாததால், இந்த நெருக்கடி ஏற்பட்டது. ஏனெனில், கடந்த நூற்றாண்டில், சில நாடுகள் மற்றவர்களைப் பற்றி, எதிர்கால தலைமுறையைப் பற்றி சிந்திக்கவில்லை,” என்று அவர் கூறினார்.
இந்தியா, புத்தர் போதனைகளைப் பின்பற்றி கடந்த ஒன்பது ஆண்டுகளில் பெரிய அளவில் முன்னேறி வருகிறது.
உலகின் பல்வேறு நாடுகளில் அமைதிப் பணிகளாகட்டும், துருக்கியில் நிலநடுக்கம் போன்ற பேரிடராகட்டும், ஒவ்வொரு நெருக்கடியிலும் இந்தியா தனது முழுத் திறனை வெளிப்படுத்தி மனித நேயத்துடன் பணியாற்றி வருகிறது. என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இதன்போது தெரிவித்தார்.