நாடாளுமன்றத்தில் சபாநாயகர் பதவிக்கு தமது கட்சியில் ஒருந்தும் வேட்பாளர் ஒருவர் முன்மொழியப்படவுள்ளார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார நேற்று தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” போலி கல்வித் தகைமை குற்றச்சாட்டு காரணமாக சபாநாயகர் பதவியை வகித்த அசோக ரன்வல பதவி விலகியுள்ளார். இராஜினாமா மாத்திரம்போதாது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் அவர் விலக வேண்டும். அதுவே உரிய தண்டனையாக அமையும்.
பிரதி சபாநாயகர் விசேட வைத்திய நிபுணர் எனக் கூறப்பட்டது. ஆனால் அவரும் சாதாரண வைத்தியர்தான். இது தொடர்பிலும் நாம் கேள்வி எழுப்பவுள்ளோம்.
டிசம்பர் 17 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சபாநாயகரை தெரிவுசெய்ய வேண்டும். எமது தரப்பிலும் வேட்பாளர் ஒருவர் அப்பதவிக்கு முன்மொழியப்படுவார். ஏனெனில் தேசிய மக்கள் சக்தி சார்பில் முன்மொழியப்படும் சபாநாயகர் தொடர்பில் எமக்கு நம்பிக்கை இல்லை. தகுதியான ஒருவரை பிரேரிப்போம்.
டிசம்பர் 16 ஆம் திகதி எமது நாடாளுமன்றக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதன்போது சபாநாயகர் வேட்பாளர் இறுதிப்படுத்தப்படுவார்.”- என்றார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக ரோஹினீ குமாரி விஜேரத்னவின் பெயர் முன்மொழியப்படவுள்ளது என தெரியவருகின்றது.
