” சஜித் ஆட்சியில் தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவோம்” – திகா

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் அமையும் அரசாங்கத்தில் தோட்டத் தொழிலாளர்களை நிச்சயம் சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவோம் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

லிந்துல சமரவியூ மண்டபத்தில் நடைபெற்ற தோட்டக் கமிட்டித் தலைவர்கள் அமைப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

சங்கத்தின் உபதலைவரும் அக்கரபத்தனை பிரதேச சபை முன்னாள் உறுப்பினருமான வேலு சிவானந்தன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பலர் கலந்து கொண்டார்கள். அவர் தொடர்ந்து பேசுகையில்,

” 2004 ஆம் ஆண்டு முதன் முதலாக அரசியலில் பிரவேசித்த எனக்கு 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வாக்களித்து மக்கள் அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொடுத்து கெபினட் அமைச்சராகக் கொண்டு வந்தார்கள். தேர்தல் காலத்தில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நல்லாட்சி அரசாங்கத்தில் நிறைவேற்றும் வகையில் ஏழு பேர்ச் காணியில் தனிவீட்டுத் திட்டம், அதற்கான காணி உறுதிப் பத்திரம், பிரதேச சபைகள், செயலகங்கள் அதிகரிப்பு, அதிகார சபை, உலக வங்கியின் நிதியுதவியுடன் சுத்தமான குடிநீர்த் திட்டம், நவீன வசதிகளுடன் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள், சத்துணவுத் திட்டம் என பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டிருந்தேன்.

கிடப்பில் போடப்பட்டிருந்த இந்திய அரசாங்கத்தின் 4000 வீடுகளை கட்டிக் கொடுத்ததால் இந்திய அரசாங்கத்தின் நன்மதிப்பைப் பெற்றதோடு பிரதமர் மோடி மேலும் 10 ஆயிரம் வீடுகளிக் கட்டி கொடுக்க உறுதியளித்தார்.

நாலரை ஆண்டு காலப் பகுதியில் மலையகத்தில் இதுவரை எந்தவொரு அரசியல்வாதியும் செய்யாத வேலைத் திட்டங்களை செய்து காட்டிய காரணத்தால் என்மீது நம்பிக்கை வைத்து கடந்த தேர்தலில் 85 ஆயிரத்துக்கும் அதிகமான விருப்பு வாக்குகளை அளித்து மக்கள் மீண்டும் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்து அனுப்பினார்கள். தற்போதைய அரசாங்கத்தில் நிதி இல்லாமல் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள முடியாது என்பதை உணர்ந்து அமைச்சரவையில் இணைந்து கொள்ள அழைப்பு வந்தும் ஏற்றுக் கொள்ளவில்லை.

அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களே நிதி இல்லாமல் ஒரு மண்ணாங்கட்டியும் செய்ய முடியாது என்று கூறியுள்ள நிலையில் நானும் வெறுமனே பெயருக்கு அமைச்சராக இருந்து மக்களை ஏமாற்ற விரும்பவில்லை. அமைச்சராக இல்லாவிட்டாலும் தொடர்ந்து மக்களுடன் இருந்து குரல் கொடுப்பேன்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு கூட்டு ஒப்பந்தத்தில் தொடர்ந்து தங்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. தென்னிலங்கை மக்களுக்கு காணிகளைப் பிரித்துக் கொடுத்துள்ளது போல, தோட்டத் தொழிலாளர்களுக்கும் காணிகளைப் பிரித்துக் கொடுக்கும் போது அவர்கள் சொந்த நிலத்தில் அக்கறையுடன் வேலை செய்து தேவையான வருமானத்தைத் தேடிக் கொள்ள முடியும். இந்த விடயத்தில் சஜித் பிரேமதாச உறுதியாக இருந்து வலியுறுத்தி வருகிறார். அடுத்து வரும் தேர்தலில் சஜித் தலைமையில் அரசாங்கம் அமையும் போது தோட்டத் தொழிலாளர்களை நிச்சயம் சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவோம் .” – என்றார் .

Related Articles

Latest Articles