“எங்கள் கட்சிக் கொள்கையான சமஷ்டி வழிக்கு வந்த கஜேந்திரகுமாருக்கு நன்றி. சமஷ்டியை நாங்கள் விட்டுக்கொடுக்கவில்லை. இலங்கைத் தமிழரசுக் கட்சியை மலினப்படுத்தி அழித்து விடலாம் என்பது பகல் கனவே.”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சம்பந்தனோ, சுமந்திரனோ மாகாண சபை முறைமை நிராகரிக்கவில்லை. அதேநேரம் அது எமது தீர்வு என்றும் சொல்லவில்லை.
நான் கடந்த ஊடக சந்திப்பில் சொன்ன விடயங்களை ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகள் மறுதலிக்கவில்லை. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அதற்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றது.
கஜேந்திரகுமார் 13ஆம் திருத்தத்தையும் அரசமைப்பையும் குழப்பி ஏக்கிய ராஜ்ஜிய மற்றும் ஒற்றையாட்சி என இரண்டையும் கூறுகின்றார். அது 38 வருடங்களாகத் தோல்வியடைந்த முறை என அவர் சொல்கின்றார்.
மாகாண சபை சட்டத்தின் மூலம்தான் தற்போது உள்ள உள்ளூராட்சி சபைகள் முறைமை காணப்படுகின்றது. நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கஜேந்திரகுமாரின் கட்சியும் போட்டியிட்டது. அது ஒற்றையாட்சி இல்லை என அவர் சொல்கின்றாரா என விளங்கவில்லை.
கஜேந்திரகுமார் முடக்கம், முடக்கம் எனச் சொல்கின்றார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் எழுதி முடக்கக் கூடாது என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுகின்றார்.
எங்களைப் பொறுத்தவரையில் 1987 இற்கு முன்னர் நாடாளுமன்றக் கட்டமைப்புக்குப் பின்னர் உள்ளூராட்சி சபை முறைமைதான் காணப்பட்டது.
1988 இற்குப் பின்னர் 13ஆம் திருத்தச் சட்டமூலம் ஒரு கட்டமைப்பாக மாகாண சபை கொண்டுவரப்பட்டது.
நாடாளுமன்றுக்கு அடுத்ததாக உப சட்டவாக்க அலுவலகமாக அது காணப்பட்டது.
13ஆம் திருத்தமும் மாகாண சபையும் எமது அரசியல் அபிலாஷைகளுக்குத் தீர்வு அல்ல. எமது கட்சியின் நிலைப்பாடும் அதுவே.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் அறிக்கை உள்ளக விசாரணையை வலியுறுத்துவது எமக்கு ஏமாற்றமளிக்கின்றது எனக் கடிதத்தில் சொல்லியிருக்கின்றோம். இந்தக் கடிதம் நானும் சுமந்திரனும் மட்டும் கையொப்பம் வைத்து அனுப்பிய கடிதம் அல்ல. எமது கட்சியின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பம் வைத்துள்ளனர்.
சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை அரசு நடைமுறைப்படுத்த வலியுறுத்த வேண்டும் என ஐ.நாவுக்குக் கடிதம் எழுதியுள்ளோம். பிறகு எவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சி சமஷ்டியைக் கைவிட்டு விட்டதாகக் கூற முடியும்.?
ஏக்கிய ராஜ்ஜிய நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வரப்பபட்டால் இலங்கைத் தமிழரசுக் கட்சி எதிர்த்து வாக்களிக்கும். அதேவேளை ஏக்கிய ராஜ்ஜிய ஒற்றையாட்சியும் அல்ல சமஷ்டி ஆட்சியும் அல்ல என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கின்றோம். ஒருமித்த நாடு என்றால் ஒரு நாடா? ஒன்றுக்கு மேற்பட்டவையையே ஒருமித்த நாடு என்பார். தமிழ் அர்த்தத்தை விட்டு சிங்களத்தைப் பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
எனக்குப் போதிய அறிவு இருக்கின்றது. எனக்கு விளங்காது என கஜேந்திரகுமார் நினைப்பது பொருத்தமற்றது.
ஏக்கிய ராஜ்ஜிய பற்றி நிஹால் அபேசிங்க சுவிட்சர்லாந்தில் சொன்னதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சொல்கின்றார்.
நிஹால் அபேசிங்க உத்தியோகபூர்வமானவரா? அநுரகுமார திஸாநாயக்க, பிமல் ரத்நாயக்க சொல்ல வேண்டும். மக்களைத் திசை திருப்புகின்றனர், திசை திருப்புகின்றனர் எனச் சொல்லி காங்கிரஸே குழப்புகின்றது.
1988 நவம்பரில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலம் மாகாண சபை நடைமுறையில் உள்ளதுதானே.
அண்மையில் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவீர்களா என கஜேந்திரகுமாரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்டபோது, இல்லை கேட்கமாட்டோம் என அவர் சொல்லி இருக்கலாம்தானே. அங்கு நான் முதல்வர், உறுப்பினர் எனப் போட்டியிடுகின்றனர். போட்டியிடுவது பற்றி தெளிவாகச் சொல்லலாமே ஏன் மழுப்புகின்றார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது எனக்குத் தனிப்பட்ட மதிப்பு இருக்கின்றது. அதைப் பேண விரும்புகின்றேன்.
எங்கள் கட்சிக் கொள்கையான சமஷ்டி வழிக்கு வந்த கஜேந்திரகுமாருக்கு நன்றி. சமஷ்டியை நாங்கள் விட்டுக்கொடுக்கவில்லை.
இலங்கைத் தமிழரசுக் கட்சியை மலினப்படுத்தி அழித்து விடலாம் என்பது பகல் கனவே. தந்தை செல்வா போய் விட்டார். நாங்களும் போய் விடுவோம். ஆனால், தமிழரசுக் கட்சி பலமாகத் தொடர்ந்து தமிழ் மக்கள் நலனுக்குக் குந்தகமிழைக்காத வகையில் செயற்படும். எங்களை அடிப்பதில் மினக்கெடாமல் செயற்படுங்கள்.
சமஷ்டி எங்கள் இலக்கு. சீதனம் முதுசம் எனச் சொல்ல முடியாதே. ஒன்றாகப் பயணிப்போம். தமிழரசுக் கட்சி எந்த இலக்குக்காக ஆரம்பிக்கப்பட்டதோ அந்த இலக்கில் இருந்து வழுவாமல் பயணிப்போம்.” – என்றார்.
