இலங்கை பிரஜை என்றபோதிலும் இலங்கையில் இரண்டாம்தர பிரஜைகளாக வாழ்வதற்கு தயாரில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் என்னிடம் கூறினார். அந்த கருத்து நியாயமானது – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
கனடாவில் இலங்கையர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ சம்பந்தன் நாடாளுமன்றத்தில் எனக்கு அருகில்தான் சில காலம் அமர்ந்திருந்தார். அவரின் சில அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் எமக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒருநாள் எனது கைகளை பிடித்துக்கொண்டு சம்பந்தன் இவ்வாறு கூறினார்.
“அநுர நான் இலங்கையர் பிரஜை என உரத்தகுரலில் சர்வதேசத்திடம் கூற தயார். ஆனால் இலங்கையில் இரண்டாம் பிரஜையாக வாழத்தயாரில்லை.” – என்றார். இது நியாயமானது.
அதேபோல ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளே என்னிடம் ஒருநாள், “ அநுர இந்த நாட்டில் என்னால் அமைச்சுபதவி மட்டுமேவர முடியும். அந்த இடத்துக்கு வந்துவிட்டேன்.” – எனக் கூறினார். தனது மொழி, மதம், இனத்தால் தன்னால் இந்நாட்டின் ஜனாதிபதியாக முடியாது என அவர் உணர்ந்திருந்தால் அவ்வாறானதொரு நிலை ஏற்புடையது அல்ல.
எனவே, இனம், மத, மொழி, கலாசாரம் சுதந்திரம்போல அரசியல் சுதந்திரமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதனை நாம் ஏற்கின்றோம்.” – என்றார்.
