நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கக் கோரும் தோட்டத் தொழிலாளர்களின் நீண்டகாலப் போராட்டத்திற்கோ அல்லது தோட்ட அதிகாரிகளின் 70% சம்பள உயர்வுக்கான போராட்டத்திற்கோ சாதகமான பதிலை வழங்காத பெருந்தோட்ட உரிமையாளர்கள் உற்பத்திக்கு ஏற்ற சம்பளத்தை வழங்கத் திட்டமிட்டுள்ளனர்.
தேயிலைத் தோட்டங்களில் நிலவும் முட்டுக்கட்டைகளை சமாளிக்க, உற்பத்தித்திறனுடன் இணைக்கப்பட்ட ஊதிய மாதிரிதான் ‘முன்னோக்கிச் செல்லும் ஒரே நடைமுறை வழி’ என புதிதாக தெரிவு செய்யப்பட்ட பெருந்தோட்டங்களின் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்ற சங்கத்தின் 168ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்தில் சங்கத்திற்கு நியமிக்கப்பட்ட புதிய தலைவர் என்ற வகையில் உரையாற்றும் போதே சேனக அலவத்தேகம இவ்வாறு தெரிவித்துள்ளார்.
‘அரசியல் தொடர்புள்ள நபர்களால் தூண்டப்பட்ட கும்பல் வன்முறையால் நேர்மையான முறையில் இடம்பெற்ற ஊதிய பேச்சுவார்த்தை வன்முறையில் முடிந்தது.’ என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
1992 இல் 327,000 ஆக இருந்த பெருந்தோட்ட மக்கள் தொகை 115,000 ஆகக் குறைந்தமை தேயிலை உற்பத்தியின் வருந்தத்தக்க நிலையை அடையாளப்படுத்தும் வலுவான காரணியாகும் எனத் தெரிவித்த தலைவர் அலவத்தேகம, மேலே குறிப்பிடப்பட்டவாறு நிலையான ஊதிய மாதிரியின் தேவை எழுப்பப்பட்டுள்ள விடயத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
விவசாய இரசாயனங்கள் மீதான தடை நீக்கப்பட்டபோதிலும், வருந்தத்தக்க வகையில் இந்த பக்கச்சார்பான கொள்கைகளின் விளைவுகள் இன்னும் பல ஆண்டுகளுக்குத் தொடருமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரசாயன உரங்கள் மீதான தடை மீளப்பெற்றுள்ள போதிலும், தேயிலைத் தோட்டத் துறைக்கான உரங்களை கொள்வனவு செய்வதில் உள்ளுர் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், “நாம் நடைமுறைப்படுத்த முயற்சிக்காத இந்தத் தவறான கொள்கைகளுக்காக தோட்டங்கள் தண்டிக்கப்படக் கூடாது.” என மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த மாதம் நடைபெற்ற இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர் சங்கத்தின் 23ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்தின் போது இந்த விடயம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
தேயிலை பயிர்ச்செய்கையின் நிலை குறித்து கருத்து வெளியிட்ட சங்கத்தின் முன்னாள் தலைவர் சஞ்சய் ஹேரத், இரசாயன உரப் பாவனையைத் தடை செய்வதற்கான தூர நோக்கற்ற தீர்மானத்தின் காரணமாக இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களிலும் தேயிலை விளைச்சல் 18.6% வீழ்ச்சியடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி முதல் ஜூலை 2022 வரையிலான காலகட்டத்தில், முன்னைய வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 35.07 மில்லியன் கிலோ குறைவு எனக் குறிப்பிட்டுள்ளார்.
இக்கலந்துரையாடலில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைய, தேயிலை ஏற்றுமதியானது, 2022 ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 9.77% குறைவடைந்துள்ளது.
இந்த ஆண்டின் இதே காலப்பகுதியில், ஏற்றுமதி 148.05 மில்லியன் கிலோவாக இருந்ததோடு, இது 2021 உடன் ஒப்பிடும்போது 14.47 மில்லியன் கிலோ குறைவாகும். இந்த வகையில் ஏற்றுமதி குறைந்தமைக்கு விளைச்சல் குறைவடைந்தமையே காரணம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை ரூபாவில் ஏற்றுமதி வருமானம் 37% உயர் வளர்ச்சியைப் பதிவு செய்திருந்த போதிலும், டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட உடனடி வீழ்ச்சி காரணமாக இது நிகழ்ந்தது.
இலங்கையின் தேயிலை தொழிற்துறைஅச்சுறுத்தலுக்கு உள்ளான சூழ்நிலையில் அதன் உலகளாவிய நற்பெயரை மீளப் பெற வேண்டுமென பெருந்தோட்டங்களின் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய இலங்கை தேயிலை சபையின் தலைவர் நிராஜ் டி மெல் தெரிவித்துள்ளார்.
‘இந்தியாவின் உற்பத்தித் திறனை நாம் குறைத்து மதிப்பிட்டாலும், இன்று அவர்கள் உலகின் இரண்டாவது பெரிய தேயிலை உற்பத்தியாளராக மாறியுள்ளனர்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய துறையின் முன்னேற்றம் தடைபடுவதற்கு காரணமான பல்வேறு “தீமைகள்” பற்றிய விடயங்கள் குறித்து சபையின் தலைவர் எந்த விடயத்தையும் தெரிவிக்கவில்லை.
கடந்த காலங்களை விட தற்போது இந்தியா சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருப்பதாகவும், இலங்கை தேயிலையை விட 2-3 அமெரிக்க டொலர்கள் குறைந்த விலையில் அவர்களது தேயிலையை பெற்றுக்கொள்ளக்கூடிய நிலைமை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“மீண்டும் விளைநிலங்களுக்குச் செல்லுங்கள், இலங்கைத் தேயிலையின் புகழை மீண்டும் பெற வேண்டும்,” என தோட்ட உரிமையாளர்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
