சம்பூரில் மனித என்பு எச்சங்கள்: அகழ்வு செய்வதா? இல்லையா?

திருகோணமலை, சம்பூரில் மனித எலும்பு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்து அகழ்வு செய்வதா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்க எதிர்வரும் ஓகஸ்ட் 6 ஆம் திகதி விசேட கூட்டம் ஒன்றை நடத்த வேண்டும் என்று மூதூர் நீதிவான் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

இந்தக் கூட்டத்தில் தொல்பொருள் திணைக்களம், தடயவியல் பிரிவினர், சட்ட வைத்திய அதிகாரி, புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியகம், குற்றவியல் பிரிவினர், தேசிய நிலக்கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தினர், பொலிஸ் திணைக்களம் என்பனவற்றின் அலுவலர்கள் நீதிவான் திருமதி.தஸ்னீம் பெளசான் தலைமையில் ஒன்றுகூடி ஆராய்வது என்றும், அதன் பின்னர் எடுக்கப்படும் தீர்மானத்துக்கு அமைய இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் இன்று தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டிய தரப்புகளுக்கான அழைப்பை சம்பூர் பொலிஸார் அனுப்ப வேண்டும் எனவும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 25 ஆம் திகதி மூதூர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய இன்று சட்ட வைத்திய அதிகாரி மன்றுக்கு அறிக்கையை முன்வைத்தார். அதன்படி கண்டெடுக்கப்பட்டுள்ள எலும்பு எச்சங்கள் மிகவும் பழைமையானது என்று குறிப்பிட்டிருந்தார்.அதேவேளை தொல்பொருள் திணைக்களத்தினர் முன்வைத்த அறிக்கையின்படி இவ்விடத்தில் முன்னர் மயானம் ஏதாவது இருந்துள்ளதா என்பதைத்  துல்லியமாகக் கூற முடியாதுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தீர்மானம் ஒன்றுக்கு ருவதாயின் இந்த அகழ்வுடன தொடர்புடைய சகல தரப்புகளுடனும் இணைந்து கலந்துரையாட வேண்டிய நிலை உள்ளதால் அதற்கான நடவடிக்கை எடுப்பது என்று நீதிமன்றம் தீர்மானித்தது.

கடந்த 19 ஆம்  திகதி சம்பூர் பிரதேசத்தில் மிதிவெடி அகற்றும் பிரிவினர் அகழ்வில் ஈடுபட்ட போது மனித மண்டையோடு மற்றும் எலும்பு எச்சங்கள் என்பன வெளிவந்தன. இதனையடுத்து அகழ்வு வேலைகள் மூதூர் நீதிமன்ற உத்தரவின்படி இடைநிறுத்தப்பட்டன. அதனையடுத்து 25 ஆம் திகதி இடத்தைப் பார்வையிட்ட நீதிவான் நேற்று வரை அகழ்வை இடைநிறத்த உத்தரவிட்டிருந்தார். அத்துடன் சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்பொருள் பிரிவினர் அகழ்வைத்  தொடர்வதா, இல்லையா என்பதைத் தீர்மானிக்க நீதிமன்றத்துக்கு  அறிக்கை தர வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.

Related Articles

Latest Articles