சாமிமலையில் மண்ணின் மைந்தர்கள் கௌரவிப்பு

பிரதேச அபிவிருத்தி அரங்கத்தின் ஏற்பாட்டில் சாமிமலையில் நடைபெற்ற துறைசார் சாதனையாளர்களை பாராட்டும் நிகழ்வு நேற்று முன்தினம் 17 ஆம் திகதி சாமிமலை ஆலய கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

சாமிமலை பிரதேசத்திலுள்ள 24 தோட்டப் பிரிவுகளிற்கும் சேவையை வழங்கி அப்பிரிவுகளிலுள்ள தனித்திறமையாளர்களை அடையாளப்படுத்தி அவர்களை ஊக்கப்படுத்துவதற்கான செயற்பாடுகளாக அரங்கத்தின் இச்செயற்பாடு அமைந்ததது.

மலையகத்தில் சாமிமலையை பிறப்பிடமாகக் கொண்டு தற்போது பல்வேறு பிரதேசங்களில் வாழுகின்றவர்கள் தமது தனிப்பட்ட முன்னேற்றத்தோடு தாம் பிறந்து வளர்ந்த தமது சமூகத்திற்கும் சேவைகளை வழங்கி வருகின்ற கல்வி, கலை, சமூகசேவை, மருத்துவம், காவல்துறை, விளையாட்டு, தொழில்முயற்சியாளர்கள், இளங்கவிஞர்கள் ஓய்வு பெற்ற அதிபர் ஆசிரியர்கள் மற்றும் ஊடகம் முதலான துறை சார்ந்தவர்கள் பாராட்டப்பட்டனர்.

நிகழ்வின் பிரதம அதிதியாக நோர்வுட் பிரதேச செயலகத்தின் யெலாளர் ஐ. எம் சேனநயக்கா கலந்து கொண்டதுடன், செயலகத்தின் சமுக சேவை உத்தியோகத்தர் திருமதி மோகனாராணி, தேசிய கலையிலக்கிய பேரவையின் பொதுச் செயலாளர் சிவ ராஜேந்திரன், வணிக உலக சர்வதேச அமைப்பின் இயக்குனர் ரகு இந்திர குமார், மஸ்கெலியா போலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஸ்பகுமார உட்பட வர்த்தக மற்றும் கல்வி சார் பிரதிநிதிகள் விருந்தினர்களாகக் கலந்து விழாவை சிறப்பித்தனர்.

சாமிலை பிரதேசத்தில் இத்தகைய பாரட்டு நிகழ்வனது பிரமாண்டமான முறையில் நடந்த முதல் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது. விழாவின் சிறப்பம்சமாக மலையக மக்களின் வாழ்வியலில் வெளிப்படும் மகிழ்வான தருணங்களை அடையளப்படுத்தும் தப்பு சத்தம் எனும் கவியரங்கமும் நாட்டார் பாடலும் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றன.

நிகழ்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட துறைசார் ஆளுமைகளுக்கான நினைவுப்பரிசும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் பாடசாலை மாணவர்ளுக்கு இசை பயிற்சிக்கான உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

Related Articles

Latest Articles