சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 4,743 முறைப்பாடுகள்-டலஸ் அழகப்பெரும

நாளாந்தம் 25 சிறுவர்கள் பல்வேறு வகையான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இந்த துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்ற சிறுவர்களில், சுமார் 21 வீதமானோர் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பேருவளை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், “இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையிலும், 180 நாட்களில்   சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 4,743 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்த முறைப்பாடுகளின் எண்ணிக்கையை 180 ஆல் வகுக்கும்போது, ​​ நாளொன்றிற்கு 25 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர். அதாவது, ஒரு மணித்தியாலத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர். இந்த குற்றச்சாட்டுகளில் பாதிக்கின்ற சிறுவர்களை வயதுக்கு ஏற்ப பிரிந்தால், 21%மானோர் 5 வயதுக்குட்பட்ட பச்சிளம் குழந்தைகள், 17% மானோர் 5 முதல் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் , 38% வீதமானோர் 11 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள். 75 வீதமானோர் 15 வயதிற்குட்பட்டவர்களாகவும் பதிவாகியுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 13 வீதமானோரின் பிரதிவாதியாக தந்தை அடுத்ததாக தாய் மற்றும் மதகுருமார்கள் இருக்கின்றனர்” என்றும் அவர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles