“இலங்கையில் பெருந்தோட்டத்துறையின் பிரதான அடையாளமாக ‘சிலோன் டீ’ என்பதே இருக்கின்றது. அந்த நாமத்தை பெற்றுத்தந்த தேயிலை உற்பத்தியை கட்டங் கட்டமாக அழித்து, அதற்கு பதிலாக முள்ளுத்தேங்காய் உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டது. இயற்கைக்கும், நீர்வளத்துக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய முள்ளுத்தேங்காய் உற்பத்தி தடைசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.எனவே, அவற்றை முழுமையாக அகற்றுவதற்கான வேலைத்திட்டம் என்ன.”
– இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. வாய்மூல விடைக்கான கேள்வி – பதில் நேரத்திலேயே வேலுகுமார் எம்.பி. மேற்படி வினாவை தொடுத்தார்.
இதற்கு பதிலளித்த பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ பத்திரண,
” முள்ளுத்தேங்காய் பயிரிடுவதற்கு 2019 ஆம் ஆண்டு நவம்பரில் அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டது.இவ்விவகாரம் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கையொன்று இடம்பெற்றுவருகின்றது. தற்போதைய நடைமுறை தொடரட்டும் என எமக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. எனவே, நீதிமன்ற தீர்ப்பு வெளியானதும் கொள்கை அடிப்படையில் தீர்மானம் எடுக்கப்படும்.” – என்றார்.
அத்துடன் முள்ளுத்தேங்காய் உற்பத்தியை அகற்றும்போது அத்தொழில் துறையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் நலன்புரிசார் விடயங்கள் தொடர்பில் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கை என்னவென்று மற்றுமொரு கேள்வியை வேலுகுமார் எம்.பி. எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், ” இறப்பர் உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான இடங்களிலேயே முள்ளுத்தேங்காய் பயிரிடப்பட்டுள்ளது. சில இடங்களில் தேயிலை பயிரிடப்பட்ட இடத்திலும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தற்போது பயிரிடப்பட்டுள்ளவற்றை அகற்றுவதற்கு முடிவெடுக்கப்படவில்லை. எனினும், அவ்வாறானதொரு முடிவை எடுத்தால் இறப்பர், தெங்க, தேயிலை உற்பத்தியில் ஆர்வம் காட்டுமாறு கம்பனிகளிடம் கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றார்.
