சீனாமீது மீண்டும் வர்த்தக்போர் தொடுப்பு!

 

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 100 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று அறிவித்துள்ளார்.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போர் மேலும் உக்கிரமடைந்துள்ளது.
இரு நாட்டு தலைவர்களுக்கிடையிலான நேரடி சந்திப்பும் இரத்தாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

குறிப்பாக, தங்கள் நாட்டின் பொருட்கள் மீது அதிக வரி விதிக்கும் நாடுகள் மீது பரஸ்பரம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, சீனாவில் இருந்து இறக்குமதி பொருட்கள் மீது 145 சதவீத வரியை உயர்த்தினார்.

இதற்கு பதிலடி கொடுத்த சீனா, அமெரிக்க பொருட்கள் மீது 125 சதவீத வரியை உயர்த்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப்போர் மூண்டது.

அதேவேளை, வர்த்தகப்போரை முடிவுக்குக் கொண்டுவர இரு நாடுகளும் சுவிட்சர்லாந்தில் பேச்சு நடத்தின. பேச்சு முடிவில் சீன பொருட்கள் மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரியை 90 நாட்களுக்கு நிறுத்துவதாக கடந்த மே மாதம் 10ம் திகதி அமெரிக்கா அறிவித்தது. இதனை தொடர்ந்து அமெரிக்க பொருட்கள் மீதான வரியை சீனா குறைத்தது.

அதன்படி, சீன பொருட்கள் மீதான வரியை 145 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அமெரிக்கா குறைத்தது. அதேபோல், அமெரிக்க பொருட்கள் மீதான வரியை 125 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக சீனா குறைத்தது.

அதேவேளை, கூடுதல் வரிவிதிப்பு நிறுத்தத்திற்கான 90 நாட்கள் அவகாசம் கடந்த ஆகஸ்ட் 10ம் திகதி நிறைவடைந்ததையடுத்து கால அவகாசம் கூடுதலாக 90 நாட்களவரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 100 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று அறிவித்துள்ளார்.

இந்த கூடுதல் வரி விதிப்பு நவம்பர் 1ம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஏற்கனவே 30 சதவீத வரி உள்ள நிலையில் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் வரி 130 சதவீதமாக அதிகரிக்க உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வரும் 30ம் திகதி சந்திக்க இருந்தனர். தென்கொரியாவில் நடைபெறும் எபிஇசி கூட்டத்தில் பங்கேற்க உள்ள இரு தலைவர்களும் நேருக்கு நேர் சந்தித்து பேச இருந்தனர்.

ஆனால், சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி அறிவித்துள்ள டிரம்ப் இம்மாத இறுதியில் சீனா அதிபரை சந்திக்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். அதேவேளை, சீன பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்ட நிலையில் அமெரிக்க பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

Related Articles

Latest Articles