தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் உணவு, சுகாதார சேவை மற்றும் கல்வி உபகரணங்கள்மீதான வற்வரி நீக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
காலியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
முதலாவது பாதீட்டிலேயே இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மின்சாரக் கட்டணம் மூன்றிலொரு பங்கு குறைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
“மக்களை பாதுகாக்கவே அரசாங்கம் உள்ளது, ஆனால் தற்போதுள்ள ஆட்சியாளர்கள் மக்களை வதைத்து தம்மை பாதுகாத்துக்கொள்கின்றனர். தேசிய மக்கள் சக்தி ஆட்சியென்பது மக்களை பாதுகாக்கும் அரசாங்கமாகும் என்பதை கூறிவைக்கின்றோம்.
உணவுக்கு இந்த அரசு வரிவிதிக்கின்றது. எமது ஆட்சியில் உணவுமீதான வற்வரி நீக்கப்படும். சுகாதாரம் மற்றும் சுகாதார சேவைகள்மீதான வற்வரியும் நீக்கப்படும். கல்வி உபகரணங்கள்மீதான வற்வரியும் நீக்கப்படும்.” – என்றார்.
