கட்சியின் 72 ஆவது மாநாட்டால் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடும் எனவும், கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர குறித்த மாநாட்டில் பங்கேற்கமாட்டார் எனவும் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கட்சியின் சர்ச்சைக்குரிய உறுப்பினர்கள் அனைவரும் நேற்று ஒரே மேடையில் காட்சியளித்தனர்.
அத்துடன், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது எனவும் சூளுரைத்தனர்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 72 ஆவது ஆண்டுவிழா கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று மதியம் கொழும்பில் நடைபெற்றது.
குறித்த மாநாட்டை கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவின் தொகுதியான குருணாகலையில் நடத்துவதற்கு முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், ஆளுங்கட்சி பக்கம் அமைச்சு பதவிகளை பெற்றுள்ள சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையின் பிரகாரம் கொழும்பில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இதனால் தயாசிறி ஜயசேகரவும், அவர்களின் சகாக்களும் மாநாட்டில் பங்கேற்கமாட்டார்கள் எனவும் கூறப்பட்டது. தயாசிறி ஜயசேகரவின் பொதுச்செயலாளர் பதவிகூட பறிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அமைச்சர்களாக உள்ள சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களான நிமல் சிறிபாலடி சில்வா, மஹிந்த அமரவீர மற்றும் பிரதி அமைச்சு பதவிகளை பெற்றுள்ள லசந்த அழகியவன்ன உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர்.
கட்சி பிளவுபடும் என எதிர்பார்க்கப்பட்டாலும், இணைந்து பயணிப்போம் என மாநாட்டில் உரையாற்றிய சுதந்திரக்கட்சி முக்கியஸ்தர்கள் குறிப்பிட்டனர். சுதந்திரக் கட்சியை அழிக்க முடியாது எனவும் எடுத்துரைத்தனர்.
மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும் சந்திரிக்கா அம்மையார் பங்கேற்கவில்லை. அவரின் வாழ்த்து செய்தி வாசிக்கப்பட்டது.
பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர் விஜயதாச ராஜபக்ச உட்பட கட்சிகளின் பிரதிநிதிகளும் மாநாட்டில் பங்கேற்றிருந்தனர்.
