உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதி போட்டியில் ‘சூப்பர் சிக்ஸ்’ சுற்று இன்று தொடங்குகிறது. இதன் முதல் ஆட்டத்தில் சிம்பாப்வே- ஓமான் அணிகள் மோதுகின்றன.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின.
லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இருந்து சிம்பாப்வே (8 புள்ளி), நெதர்லாந்து (6 புள்ளி), வெஸ்ட்இண்டீஸ் (4 புள்ளி) அணிகளும், ‘பி’ பிரிவில் இருந்து இலங்கை (8 புள்ளி), ஸ்காட்லாந்து (6 புள்ளி), ஓமான் (4 புள்ளி) அணிகளும் முறையே முதல் 3 இடங்களை பிடித்து ‘சூப்பர் சிக்ஸ்’ சுற்றுக்கு முன்னேறின.
நேபாளம், அமெரிக்கா (ஏ பிரிவு), அயர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் (பி பிரிவு) அணிகள் முறையே 4-வது, 5-வது இடத்தை பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தன.
இந்த தொடரில் ஒருநாள் ஓய்வுக்கு பிறகு ‘சூப்பர் சிக்ஸ்’ சுற்று இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதில் ஒவ்வொரு அணியும், தங்களுடைய எதிர்பிரிவில் இருந்து முன்னேறிய அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதுடன், இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் திகதி முதல் நவம்பர் 19-ந் திகதி வரை நடைபெறும் 13-வது 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெறும்.
‘சூப்பர் சிக்ஸ்’ சுற்று ஆட்டத்தை எல்லா அணிகளும் சமநிலையில் தொடங்காது. அதாவது சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கும் ஒரு அணி தனது பிரிவில் இருந்து முன்னேற்றம் கண்ட அணிகளுக்கு எதிராக லீக் சுற்றில் பெற்ற வெற்றிக்கான புள்ளி சூப்பர் சிக்ஸ் சுற்றில் கணக்கில் எடுத்து கொள்ளப்படும். இதன்படி லீக் சுற்றில் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இலங்கை, சிம்பாப்வே அணிகள் தலா 4 புள்ளிகளுடனும், ஸ்காட்லாந்து, நெதர்லாந்து அணிகள் தலா 2 புள்ளிகளுடனும், வெஸ்ட்இண்டீஸ், ஓமான் அணிகள் புள்ளி எதுவும் இல்லாமலும் சூப்பர் சிக்ஸ் சுற்றில் களம் காணுகின்றன.
