செந்தில் தொண்டமானுக்கு கிடைத்துள்ள புதிய பதவிகள்!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும் பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் , 8 பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதிச் செயலணியினால், செந்தில் தொண்டமானுக்கான இந்த நியமனங்கள், இன்று (21) வழங்கப்பட்டுள்ளன.

இந்தப் புதிய நியமனங்களுக்கான கடிதங்கள், மாவட்டச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், பசறை, லுணுகலை, எல்ல, பண்டாரவளை, ஹப்புத்தளை, ஹல்துமுல்லை, ஹாலிஎல, ஊவாபரணகம ஆகிய பிரதேசங்களுக்கான நியமனக் கடிதங்களே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளன.

பிரதேச ரீதியான பிரச்சினைகளை இணங்காணல், அபிவிருத்திகளை முன்னெடுத்தல், திட்டமிடல் உள்ளிட்ட பாரிய பொறுப்புகளைக் கொண்டிருக்கும் இந்தப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கள் பலவற்றுக்கு, ஒரே தடவையில் தமிழர் ஒருவர் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை, இதுவே முதல் முறையாகும்.

அந்த வகையில், மேற்படி பிரதேசங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக்களில் செந்தில் தொண்டமான் உள்வாங்கப்பட்டுள்ளமையானது, அப்பிரதேசங்களில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேலும் விரைவுபடுத்தும் என்று, செயலணி எதிர்பார்க்கின்றது.

பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின், ‘கிராமத்துடன் கலந்துரையாடல் ஊடான வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்துக்கு’ எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் பதுளையில் இடம்பெற்றிருந்த நிலையில், மேற்படி பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டிருந்தன.

அரசாங்கத்தின் இவ்வாறான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் விரைவுபடுத்தப்பட வேண்டுமென்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் ஆலோசனை வழங்கியுள்ள நிலையில், செந்தில் தொண்டமான் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்தப் புதிய நியமனங்கள் முக்கியத்துவமாகின்றன.

Related Articles

Latest Articles