ஜனாதிபதியை எதிர்க்க வாசு மறுப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்காமல் இருப்பதற்கு நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் கூட்டணி தீர்மானித்துள்ளது.

இந்த தகவலை ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டிருந்தாலும், அதனை நாடாளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில் உள்ளடக்குவது குறித்து சட்டரீதியலான சிக்கல் உள்ளமை உட்பட மேலும் சில காரணங்களை அடிப்படையாகக் கொண்டே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளதென தெரியவருகின்றது.

அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு தொடர்பில் ஆராய்வதற்காக 11 கட்சிகளின் கூட்டணியின் விசேட கூட்டமொன்று இடம்பெற்றது.

இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதற்கு மஹிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளாரென நம்பகரமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளதால், அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணையும் ஏற்புடையதாக அமைந்துவிடும்.

சிலவேளை, பஸிலின் நிகழ்ச்சி நிரலை ஏற்று, பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலக மறுத்தால், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தேசிய இணக்கப்பாட்டு அரசுக்கு சஜித் தரப்பு இணக்கம் தெரிவித்தால் மாத்திரமே இதற்கான ஆதரவை முழுமையாக வெளியிடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles