கடந்த 26 ஆம் திகதி முதல் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கு, நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் பேராதரவு பெருகிவருகின்றது.
இளைஞர் – யுவதிகள், மலையக புத்திஜீவிகள், சகோதர இனங்களைச் சேர்ந்த மக்கள், மாற்று கட்சிகளின் ஆதரவாளர்கள் என பலரும் ஜீவனின் கரங்களைப் பலப்படுத்துவதற்காக ஓரணியில் திரண்டுள்ள நிலையில் – வடக்கு, கிழக்கில் வாழும் இந்திய வம்சாவளி மக்களும் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
“ பொதுத்தேர்தலில் நுவரெலியா, பதுளை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் ஜீவன் தொண்டமான் தலைமையில் களமிறங்கியுள்ள காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து, மலையகத் தமிழர்களின் தாய்க்கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ,தேசிய கட்சி என்பதற்கான அங்கீகாரத்தை வழங்குமாறு எமது சொந்தங்களிடம் உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.” – என்று வடக்கு, கிழக்கில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் சிலர் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் கூறியதாவது,
“ 87 இனக்கலவரம் உட்பட இதரகாரணங்களால் மலையகத்தில் இருந்து இடம்பெயறவேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டது. நாம் இங்கு வாழ்ந்தாலும் எமது அடையாளம் மலையகம்தான். எமக்கான அரசியல் அடையாளம் காங்கிரஸ்தான். ஏனெனில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா காலத்தில் எம்மையும் அரவணைத்தே அவர் பயணித்தார்.
மலையகத்தில் மட்டுமல்ல கொழும்பு, வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் காங்கிரஸ் காலூன்றியிருந்தது. தேசிய கட்சி, தேசிய தலைவர் என்ற கட்டமைப்பு இருந்தது. 1974 இல் உருவான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில்கூட சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா உப தலைவராக செயற்பட்டார். அந்த நிலைமை மீண்டும் திரும்ப வேண்டும் என விரும்புகின்றோம். ஜீவனின் வருகை எமக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான் அவருக்கு ஆதரவை வழங்குமாறு எம் சொந்தங்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.
அமரர் ஆறுமுகன் தொண்டமானும் எமக்கு பல சேவைகளை செய்துள்ளார். ஆனால், அவரை நுவரெலியா மாவட்டத்துக்குள்ளேயே சிலர் முடக்கியனர். எமக்கும் அவருக்கும் இடையிலான உறவை துண்டித்தனர். எனினும், கடந்த 6 மாதங்களில் அந்த உறவு புதுப்பிக்கப்பட்டது. அவர் அடிக்கடி வடக்குக்கு வந்தார். ஆனால், திடீரென எம்மை விட்டு பிரிந்துவிட்டார். அந்த இடைவெளியை ஜீவன் நிரப்பவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
இ.தொ.காவின் ஆசியுடன் வடக்கில் சில பகுதிகளில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்களையும் நாம் நிச்சயம் ஆதரிப்போம். எல்லைகள்தாண்டி காங்கிரஸின் சேவை தொடரவேண்டும் என்பதுடன் தேசிய கட்சி, தேசிய தலைவர் என்ற கட்டமைப்பையும் புதுப்பித்துக்கொள்ளவேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம்.” – என்றனர்.










