ஜெனிவாவில் வெளியக விசாரணைக்கு உரமூட்டுகிறது அரசு! மொட்டு கட்சி குற்றச்சாட்டு

இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் வெளியகப் பொறிமுறைக்கு உரமூட்டும் வகையிலேயே அமைச்சர் பிமல் ரத்நாயக்க கருத்து வெளியிட்டுவருகின்றார் – என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“பட்டலந்தையில் தமது சிங்கள மக்களையே சித்திரவதைக்குட்படுத்தியவர்கள், போர் காலத்தில் தமக்கு தெரியாத தமிழ் மக்களை எப்படி கவனித்திருப்பார்கள் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
போர்க்குற்றம் தொடர்பில் ஜெனிவாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் வெளியக பொறிமுறைக்கு உரமூட்டும் வகையிலேயே இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் வைத்து இப்படி கருத்து வெளியிட்டால் அது ஹென்சாட்டில் இடம்பெறும். பின்னர் அதனை சாட்சியாக எடுத்துக்கொள்ளக்கூடும்.
போர் இடம்பெறும் காலப்பகுதியில் பிமல் ரத்நாயக்க எங்கே இருந்தார்? புலிகள் அப்பாவி மக்களை கொலை செய்யும்போது அவர் என்ன செய்தார்?

2 லட்சத்துக்கு 95 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களை பாதுகாத்து – மீட்டெடுத்தே நாம் போரை முடிவுக்கு கொண்டுவந்தோம். இது தமிழ் மக்களுக்கு எதிரான போர் அல்ல. புலிகள் அமைப்புக்கு எதிரான போராகும்.

இலங்கைப் படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை. சர்வதேச நிபுணர்களும் இதனை குறிப்பிட்டுள்ளனர். நிலைமை இப்படி இருக்கையில் தமிழ் டயஸ்போராக்களுக்கு ஒத்துழைப்பு வழக்கும் வகையிலேயே பிமல் ரத்நாயக்க கருத்து வெளியிட்டுவருகின்றார்.

Related Articles

Latest Articles