டிக்கோயாவில் மினி சூறாவளி – 23 வீடுகளுக்கு சேதம்!

நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட டிக்கோயா பட்டல்கலை மேற்பிரிவு தோட்டத்தில் நேற்று (07) மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக அந்த தோட்டத்தில் உள்ள 23 தொடர் மற்றும் தனி குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளன.

கடும் காற்று காரணமாக இந்த தோட்டத்தில் உள்ள 15ம் இலக்க தொடர் குடியிருப்பின் கூரை காற்றினால் அள்ளூண்டு சென்றுள்ளன. இதனால் இந்த குடியிருப்பில் 16  வீடுகளுக்கு மழையால் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன் கூரைத்தகரங்களும் சேதமடைந்துள்ளன.

இதே நேரம் குறித்த பகுதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து வீடுகளின் மேல் வீழ்ந்ததன் காரணமாக ஒரு வீட்டின் ஒரு பகுதி முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ஏனைய இரண்டு வீடுகளின் கூரைத்தகடுகள் சேதமடைந்துள்ளன.

இதே பகுதியில் அமைந்துள்ள மற்றுமொரு தொடர்மாடிக் குடியிருப்பில் ஒரு சில வீடுகளின் கூரை சேதமடைந்துள்ளன.குறித்த பகுதியில் சுமார் 50 மேற்பட்ட மரங்கள் மினி சூறாவளி காரணமாக முறிந்து வீழ்ந்துள்ளன

மரங்கள் மின் கம்பிகள் மீது வீழ்ந்து மின் கம்பிகள் மற்றும் வயர்கள் சேதமடைந்த தனால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளன .

சம்பவ இடத்திற்கு நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே. ரவி, இன்று (08.03.2021) காலை சமூகம் தந்து பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட வீடுகளை புனரமைக்க இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வந்து மனித வள அபிவிருத்தி நிதியத்தின் ஊடக செய்து கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

க.கிசாந்தன்

Related Articles

Latest Articles