டீப்சிக் ஏஐ செயலிக்கு தடை விதித்துள்ள அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் தீர்மானத்துக்கு சீனா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
உலக அளவில் அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளது.
அமெரிக்க நிறுவனங்களான கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ஏஐ, மெட்டா ஏஐ, கார்க் ஏஐ ஆகியவற்றுடன் தற்போது சீனாவின் டீப்சீக் ஏஐ புதிதாக அறிமுகமாகியுள்ளது.
இந்நிலையில் சீனாவின் ஏஐ செயலியை பயன்படுத்தும்போது தரவுகள் திருடப்படலாம், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் அச்சம் அடைந்துள்ளன.
இதனால் ஆஸ்திரேலிய அரசாங்க சாதனங்களில் டீப்சீக் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல அமெரிக்க நாடாளுமன்ற ஊழியர்கள் கணினி மற்றும் கையடக்க தொலைபேசிகளில் தரவிறக்கம் செய்ய வேண்டாம் என அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய நிதித்துறை அமைச்சு, சாட்ஜிபிடி, டீப்சீக் உள்ளிட்ட ஏஐ தொழில்நுட்பங்களை அலுவலக பயன்பாட்டுக்கு உபயோகிக்க வேண்டாம் என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் டீப்சீக் செயலிக்கு கட்டுப்பாடு விதித்துள்ள நாடுகளுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
‘ சட்டங்களுக்கு எதிராக தரவுகளை சேகரிக்கவோ அல்லது சேமிக்கவோ நாங்கள் எந்த நிறுவனத்தையோ அல்லது தனி நபரையோ ஒருபோதும் கோரவில்லை.” என்று சீனா தெரிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு என்ற கருத்தை மிகைப்படுத்தவோ அல்லது வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப பிரச்சனைகளை அரசியலாக்கவோ எடுக்கும் நடவடிக்கைகளை சீனா எப்போதும் எதிர்த்து வருகிறது.
சீன நிறுவனங்களின் சட்டப்பூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களை நாங்கள் உறுதியாகப் பாதுகாப்போம்” எனவும் சீன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.