டில்லியின் வளர்ச்சி கொழும்பையும் மீண்டெழ வைக்கும்

அயலவன் வளர்ச்சிடையும்போது அதன்மூலம் சூழவுள்ளவர்களும் ஏதேனுமொரு விதத்தில் பயனடைவார்கள் என்பது வாழ்க்கை சக்கரத்தின் இயல்பு. அதேபோல ஒரு குடும்பத்தில் அண்ணன் சிறந்த நிலையில் இருப்பாராயின் தம்பி, தங்கைகளையும் அரவணைத்துக்கொண்டே அவர் மேலும் முன்னேற முற்படுவார். அண்ணன் பலமாக இருப்பதே அவரின் சகோதரர்களுக்கு பக்கபலம்தான். இது மனித வாழ்வில் நாம் கண்ட – காணும் உண்மை.

தெற்காசியாவின் காவல்காரனான இந்தியாவை தமது பெரிய அண்ணாகவே இலங்கை கருதுகின்றது. ஒரு தம்பி எப்படி அண்ணன்மீது மரியாதை வைத்திருப்பானோ அதுபோலவே டில்லிமீது கொழும்பு மரியாதை வைத்துள்ளது. தாம் அணிசேராக் கொள்கையை பின்பற்றினாலும் வெளிவிவகாரக் கொள்கையில் இந்தியாவுக்கே முக்கியத்துவமும் – முன்னுரிமையும் வழங்கும் இயல்பை இலங்கை கடைபிடித்துவருகின்றது. இலங்கை அரச தலைவர்கள் இதனை வெளிப்படையாகவும் கூறியுள்ளனர். இந்த பண்பால் இலங்கை அடைந்த – அடையப்பொகும் பயன்கள், நன்மைகள் ஏராளம்.

இங்கிலாந்தில் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சியால்தான் அனைத்து ஐரோப்பிய நாடுகளும் வளர்ச்சி கண்டன. ஜப்பான் வளர்ச்சிடைய அதன் அண்மித்த நாடுகளும் அபிவிருத்தி அடைந்தன. எனவே, இந்தியா பொருளாதார ரீதியில் பலமடைந்திருப்பதால் இலங்கையின் பொருளாதாரமும் எழுச்சிபெறும் என்பது வெள்ளிடைமலை.

உலகில் இன்று வேகமாக அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் இந்தியா பிரதான இடத்தை வகிக்கின்றது. பொருளாதாரமும் சிறந்த நிலையில் உள்ளது. இலங்கையில் ரயில் பாதை அபிவிருத்தியாக இருந்தால் என்ன, வீடமைப்பு திட்டமாக இருந்தால் என்ன – எல்லாவற்றுக்கும் இந்தியா உதவியுள்ளது. ஒரு சில திட்டங்களுக்கு நன்கொடை வழங்கமுடியாவிட்டால்கூட வட்டியில்லாத கடன் வழங்கப்பட்டு கைகொடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் உள்ளன. இவ்வாறு வழங்கப்படும் கடன்களை மீள பெறுவதில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதில்லை.

அண்மையில் ஏற்பட்ட அரசியல், பொருளாதார நெருக்கடியின்போது முதல் நாடாக இந்தியா வழங்கிய கடனை, மீள செலுத்துவதற்கு இலங்கைக்கு மேலும் அவகாசம் வழங்குவது தொடர்பில் டில்லி ஆராய்ந்துவருகின்றது. இலங்கை மீண்டெழ என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் இந்தியா செய்துவருகின்றது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?

இலங்கையில் ஆரம்பத்தில் 50 ஆயிரம் வீட்டு திட்டத்தை தமது முழு நிதி பங்களிப்புடன் இந்தியா முன்னெடுத்தது. இதில் 4 ஆயிரம் வீடுகள் மலையக பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், பாரத பிரதமர் மலையகம் வந்தபோதும் மேலும் 10 ஆயிரம் வீடுகள் வழங்கப்படும் என்ற உறுதிமொழி வழங்கப்பட்டது. இலங்கையில் ஏற்பட்ட பணவீக்கத்தால் பொருட்களின் விலை எகிறின. முன்னர் 10 லட்சமாக மதிப்பிடப்பட்ட வீடொன்றுக்கு தற்போது 20 லட்சத்துக்கு மேல் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தற்போதைய பெறுமதிக்கேற்ப வீட்டு திட்டத்தை முன்னெடுக்கவும் இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது. இந்திய தூதுவருடன் நடைபெற்ற சந்திப்பொன்றின் பின்னர் இதொகாவினர் இந்த தகவலை வெளியிட்டிருந்தனர். இந்தியா பலமாக இருப்பதால்தான் இலங்கை தட்டும்போது கதவு திறக்கப்படுகின்றது. நிபந்தனையற்ற உதவிகள் வழங்கப்படுகின்றன என்பதற்கு இது மற்றுமொரு சான்று.

கொரோனா பெருந்தொற்று காலப்பகுதியில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சீனாவில் இருந்து வெளியேறும்போது அவர்களை தமது நாட்டுக்கு உள்ளீர்ப்பதற்கான நகர்வுகளை இந்தியா முன்னெடுத்து அதில் வெற்றியும் கண்டது. இவ்வாறு இந்தியாவில் முதலீட்டு வாய்ப்புகள் உருவாகும்போது அதன்மூலம் பயன் அடையக்கூடிய திட்டங்களை இலங்கை ஆரம்பிக்குமானால் மேலதிக நன்மைகளை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

உதாரணமாக சீனாவில் ஒரு பொருள் உற்பத்தி செய்யப்படுகின்றதெனில் அந்த பொருளில் இருக்கின்ற அனைத்து உதிரிப்பாகங்களும் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டவையல்ல. பல நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு சீனாவுக்கு அனுப்பப்பட்டு அங்கு அந்த பொருள் முழுமைபடுத்தப்பட்டு ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆக இந்திய நிறுவனங்களுக்கான உதிரிகளை தயாரிப்பதில் இலங்கை ஆர்வம் காட்டலாம்.

2000 ஆம் ஆண்டில் இந்தியா-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (ISFTA) நடைமுறைக்கு வந்தமை இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக விரிவாக்கத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது. எனவே, தற்போதைய சூழ்நிலைக்கேற்ப இரு தரப்பு ஒப்பந்தங்களை இலங்கை கைச்சாத்திட்டுக்கொள்வதும் – புதுப்பித்துக்கொள்தும் சாதக பலனை தரக்கூடும். ஏனெனில் தகவல் தொழில்நுட்ப துறையில் இந்தியா இன்று முதலிடத்தில் உள்ளது. புதிய ஒப்பந்தங்கள்மூலம் வாய்ப்புகளையும் பெறலாம்.

இந்தியாவானது பாரம்பரியமாக இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக திகழ்வதால் வரி விலக்கு உள்ளிட்ட சலுகைகளையும் பெறக்கூடியதாக இருக்கும்.

இலங்கைக்கான நேரடி முதலீட்டில் இந்திய நிறுவனங்களின் பங்களிப்பும் அளப்பரியது. பெற்றோலியம், சுற்றுலா ஹோட்டல்கள், உற்பத்தி, தொலைத்தொடர்பு, வங்கி என்பவற்றில் இந்திய நிறுவனங்கள் முதலிட்டுள்ளன. இந்நிறுவனங்களின் கிளைகள் இந்தியாவில் உள்ளன. எனவே, இந்தியா பொருளாதார ரீதியில் மேலும் வளரும்போது அதன் நன்மை பாய்ச்சல் இலங்கையிலும் இருக்கும் என்பதே பொருளாதார நிபுணர்களின் கருத்தாகும்.

Related Articles

Latest Articles