சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 150 வெற்றி பெற்ற முதல் அணி என்ற மாபெரும் உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது.
சிம்பாப்வேவுக்கு சென்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகள் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது ஆட்டம் ஹராரேவில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி தலைவர் சுப்மன் கில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கில் 66 ரன்களும், கெய்க்வாட் 49 ரன்களும் அடித்தனர்.
சிம்பாப்வே தரப்பில் சிகந்தர் ராசா, முஜரபானி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன்மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த வெற்றி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் 150-வது வெற்றியாக பதிவானது. இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 150 வெற்றி பெற்ற முதல் அணி என்ற மாபெரும் உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது. இந்தியாவிற்கு அடுத்த இடத்தில் பாகிஸ்தான் 142 வெற்றிகளுடன் உள்ளது.