தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அக்கட்சியின் மாநில இணைச் செயலாளர் நிர்மல் குமாரை கைது செய்ய தனிப்படை அமைத்துள்ளது மத்திய மண்டல காவல் துறை.
இந்த உத்தரவை மத்திய மண்டல காவல் துறையின் தலைவர் ஜோஷி நிர்மல் குமார் பிறப்பித்துள்ளார்.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27 ஆம் திகதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணைச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீது கரூர் நகர பொலிஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் தலைமறைவாக இருந்த மாவட்டச் செயலாளர் மதியழகன், அவருக்கு அடைக்கலம் கொடுத்த கட்சி நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோரை திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் தனிப்படை பொலிஸார் கடந்த 29-ம் திகதி கைது செய்தனர்.
அவர்கள் இருவரையும் நேற்று கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் 15 நாள் நீதிமன்ற காவல் அறிவித்தார் நீதிபதி பரத்குமார்.
இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமாரை கைது செய்ய தனிப்படை அமைத்துள்ளது மத்திய மண்டல காவல் துறை. நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டு கரூர் விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.