தலவாக்கலை சமூர்த்தி வங்கியில் சமூர்த்தி பெற வந்த நபர்கள் தகாத முறையில் நடத்தப்பட்டதாகவும், மனசாட்சியற்ற முறையில் நீண்ட நேரம் காக்க வைத்திருந்ததாகவும் வெளியாகும் செய்திக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலவாக்கலையில் அமைந்திருக்கும் சமூர்த்தி வங்கியில் வர்ணம் பூசும் வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் இன்றைய தினம் மூன்று தோட்டங்களை சேர்ந்த சுமார் 450க்கும் அதிகமானோர் தங்களுடைய சமுர்த்தி பணத்தை பெறுவதற்காக வருகை தந்திருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் தனித்தனியே பெயர்கள் வாசிக்கப்படும் போது உரிய நபர்கள் வருகை தந்து கையொப்பமிட்டு தம்முடைய பணத்தைப் பெற்றுச் சென்றனர்.
மேலும் வயதானவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளை வைத்திருப்போர் என சிலருக்கு உள்ளே அமர்ந்திருக்க இட வசதிகள் ஒதுக்கப்பட்டிருந்த பொழுதும் அனைவருக்கும் ஓய்வெடுக்க இட வசதிகள் போதாத நிலையில் சிலர் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வரிசையில் காத்திருக்க முடியாதவர்கள் ஓய்வெடுக்க வங்கியின் வளாகத்தில் அமர்ந்த சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை ஒருசிலர் சமூக வலைத்தளங்களில் தவறாக சித்தரித்து சமுர்த்தி காரியாலயத்தின் நட்பெயருக்கு கேடு விளைவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வரிசையில் காத்துக் கொண்டிருந்த சமர்த்தி பயனாளர் ஒருவர் எமக்கு கருத்து தெரிவிக்கும் பொழுது நாங்கள் நீண்ட நேரமாக சமுர்த்தி பெறுவதற்காக வரிசையில் நின்று எமக்குரிய பணத்தை பெற்றுக்கொண்டோம் ஆனால் பணத்தை பெறுவதற்கு உரிய, தகுதியுடைய நபர்கள் வருகை தராமல் ஏனையவர்கள் வருகை தந்து பணத்தை தாருங்கள் என அடாவடித்தனமாக பேசுவதாகவும் வாக்குவாதங்களில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.
இருந்த போதும் உரிய முறையில் சமுர்த்தி பணத்தை வழங்கி வைத்ததோடு பணம் பெறாத நபர்களுக்கு மீண்டும் ஒருமுறை வழங்கி வைப்பதற்கான ஏற்பாடுகளையும் நேர்த்தியாக செய்திருப்பதாக அங்குள்ள உத்தியோகத்தர்கள் தெரிவித்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
