தீபெத் ஆன்மீக தலைவர் தலாய்லாமாவிற்கு இலங்கை வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ந்தியாவின் புத்தகாயாவுக்கு பயணம் செய்திருந்த இலங்கையின் முக்கிய பிக்குகள் குழுவினர் இந்த அழைப்பை விடுத்திருந்தனர்.
தலாய்லாமா, இந்தியாவின் புத்தகாயாவுக்கு பயணம் செய்திருந்த நிலையில், அங்கு பெரும்பாலானவர்கள் பயணம் செய்தனர். அதேபோன்று தலாய்லாமா இலங்கைக்குப் பயணித்தால், இலங்கையின் சுற்றுலாத்துறை முன்னேற்றம் அடையும். பொருளாதார சிக்கலில் இருந்து மீள இதுவும் வாய்ப்பாக அமையும். என்று இலங்கையின் பௌத்த பிக்குகள் கோரிக்கை முன்வைத்தனர்.
இந்நிலையில், கொழும்பு நகரில் உள்ள சீன தூதரகம் இதற்கு தனது எதிர்ப்பை வெளியிட்டிருந்தது. சீனத் தூதரக உயர் அதிகாரி ஹூ வெய் கண்டிக்குச் சென்று பௌத்த பீடாதிபதிகளை சந்தித்து பேசியிருந்தார். தலாய்லாமாவை எந்த நாடும் வரவேற்பதை சீன அரசும், சீன மக்களும், தீபெத் மக்களும் கடுமையாக எதிர்க்கிறது என்ற செய்தியை அவர் கூறியிருந்தார். எவ்வாறாயினும், தலாய்லாமாவின் இலங்கை பயணம் இன்னமும் இறுதியாகவில்லை.
தலாய்லாமாவின் இலங்கை வருகையால் என்ன நடக்கும்?
தீபெத் ஆன்மீக தலைவர் தலாய்லாமாவின் வருகையை இலங்கையின் பௌத்த மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். தலாய்லாமா இலங்கை வரும்பட்சத்தில், இலங்கையை நோக்கி, உலகில் பல பாகங்களில் இருந்து பௌத்தத்தை பின்பற்றுவோர் இலங்கையை நோக்கிப் படையெடுப்பர். பௌத்தத்தைப் பின்பற்றுவோர் இருக்கும் நாடுகளின் பார்வை இலங்கையின் பக்கம் திரும்பும்.
பாப்பரசர் ஒரு நாட்டிற்கு பயணிக்கும் போது எவ்வளவு முக்கியத்துவம் வழங்கப்படுமோ, அதேபோன்றதொரு வரவேற்பும், மரியாதையும் தலாய் லாமாவிற்கு பௌத்தர் மத்தியில் கிடைக்கும் என்பதை எளிதாக புரியவைத்தார் இலங்கை ஜனாதிபதியின் பௌத்த விவகாரங்களின் இணைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள கலாசார, பாரம்பரிய விவகாரங்களை ஆய்வு செய்துவரும் சுஜித் அக்கரவத்த.
உலகம் முழுவதும் பௌத்தத்தை பின்பற்றுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பௌத்த என்ற மார்க்கம் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டது. குறிப்பாக மேற்கத்தேய நாடுகளில் உள்ளவர்களில் அதிகமானோர் பௌத்தத்தை தழுவி வருகின்றனர். மூத்த குடியாக கருதப்படும் தமிழர்களில் பௌத்தர்கள் இருக்கின்றனர். பௌத்தம் என்பது வாழும் கலை. பௌத்த நாடுகள் உலகில் குறைவாக இருந்தாலும், பௌத்தத்தை பின்பற்றுவோர் உலகளாவிய ரீதியில் இருக்கின்றனர். புத்தகயாவிற்கு ஆன்மீகத் தலைவர் பயணித்த போது, பெருந்திரளான மக்கள் அங்கு சென்றிருந்தனர். இந்த நிலையில், இலங்கைக்கு தலாய் லாமா பயணிக்கும் போது, அதைவிட அதிகமான மக்கள் இலங்கைக்கும் வருவார்கள். அவரின் வருகை இலங்கை பௌத்தர்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். இது புதிய அத்தியாயத்தின் ஆரம்பமாக இருக்கும் என்று சுஜித் அக்கரவத்த விபரித்தார்.
இலங்கை பயணத்தில் ஆர்வம் காட்டும் தலாய் லாமா
கடந்த 1950ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு வரவேண்டும் எனும் ஆர்வம் தலாய் லாமாவிடம் இருந்தாலும், அதை நிறைவேற்ற அவர் எடுத்த முயற்சிகள் ஏதும் பலனளிக்கவில்லை பௌத்த துறவியான உபதிஸ்ஸ தேரர் தெரிவித்தார். கண்டியிலுள்ள தலதா மாளிகை மற்றும் அனுராதபுரத்திலுள்ள புனிதமான அரச மரத்தை வழிபட வேண்டும் எனும் தனது ஆவலை தங்களிடம் தலாய் லாமா வெளிப்படுத்தியாக அவர் கூறுகிறார்.
அவரை இலங்கைக்குள் அனுமதிக்க வேண்டும் என தாங்கள் அரசிடம் கோரவுள்ளதாகவும், பௌத்த மதத் தலைவர்களுடனும் இது குறித்து பேசி வருவதாகவும் மகா சங்கத் தலைவர் உபதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.
ஆனால் இலங்கைக்கான பயணம் குறித்து தலாய்லாமாவோ அல்லது அவரது சார்பாக வேறு யாருமோ இதுவரை அரசைத் தொடர்பு கொள்ளவோ விசா கோரியோ விண்ணப்பம் ஏதுமோ செய்யவில்லை, அவ்வாறு விண்ணப்பம் கிடைக்கப்பெற்ற பின்னர் அது குறித்து இலங்கை அரசாங்கம் தீர்மானம் எடுக்கும் என வெளியுறவுத்துறையின் துணை அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்தார்.
இப்படியான சூழலில் முதல் முறையாக இலங்கை செல்ல ஆர்வம் வெளியிட்டுள்ள தலாய் லாமாவின் பயணம் யதார்த்த ரீதியில் இடம்பெறுமா என்பது இலங்கை அரசின் இராஜதந்திர நகர்வுகளைப் பொருத்தே அமையும் என்று கருதப்படுகிறது.
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தை சேர்ந்த புத்த மத துறவி தலாய் லாமா, 87 தன்னாட்சி அதிகாரம் கோரி சீனாவின் எதிர்ப்புக்கு ஆளானார். இதையடுத்து, 1959ல் சீனாவில் இருந்து வெளியேறியவருக்கு இந்தியா அடைக்கலம் அளித்தது. அன்று முதல், ஹிமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் அவர் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், தலாய் லாமாவின் இலங்கை பயணம் என்பது, இலங்கை பௌத்தர்கள் மத்தியில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் என்றும், இது புதிய அத்தியாயத்தின் மற்றுமொரு ஆரம்பம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.