சாமிமலை- ஓல்டன் தோட்ட நிலாவத்தை பிரிவின் வெளிக்கள உத்தியோகத்தர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடமையில் இன்று (9) காலை 10 மணியளவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, அப்பகுதியில் உள்ள கூடாரம் ஒன்றில் மது அருந்திக் கொண்டிருந்த இளைஞர்கள் சிலர், வெளிக்கள உத்தியோகத்தரை வெற்று மது போத்தல்களால் தாக்கியுள்ளனர்.
கடும் காயமடைந்த அவர், மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான எஸ்.சத்தியமூர்த்தி என்பவரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதுடன், இவர் மீது தாக்குதலை மேற்கொண்ட ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள் ஒருவர் அதே தோட்டத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், ஏனைய ஐந்து பேரும் வெளி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அவர்களை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
