தாய்லாந்து – கம்போடியா இடையில் போர் தீவிரம்!

தாய்லாந்து, கம்போடியா இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. இந்த போரில் இருதரப்பில் இதுவரை 33 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தென்கிழக்கு ஆசியாவில் தாய்லாந்து அமைந்துள்ளது. இதன் அண்டை நாடு கம்போடியா இரு நாடுகளும் 817 கி.மீ. தொலைவு எல்லையை பகிர்ந்து கொள்கிறது.

பண்டைய காலத்தில் முதலாம் ராமா மன்னரால் தோற்றுவிக்கப் பட்ட ரத்தனகோசின் பேரரசு தாய்லாந்தை ஆட்சி செய்தது. இதே போல இரண்டாம் ஜெயவர்மன் மன்னரால் தோற்றுவிக்கப்பட்ட கெமர் பேரரசு கம்போடியாவை ஆட்சி செய்தது.

இந்து மதத்தைப் பின்பற்றிய ரத்தனகோசின், கெமர் பேரரசுகள் தங்களது ஆட்சிக் காலத்தில் ஏராளமான இந்து கோயில்களை கட்டின. தற்போது இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளில் உள்ள இந்து கோயில்களை சொந்தம் கொண்டாடுவதில் பிரச்சினை எழுந்து போராக வெடித்திருக்கிறது.

கம்போடியா, தாய்லாந்து எல்லையில் டாங்கிரெக் மலையில் அமைந்துள்ள பிரியா விகார் என்ற சிவன் கோயிலை இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடின. இதுதொடர்பாக கடந்த 1959-ம் ஆண்டில் இரு நாடுகளும் சர்வதேச நீதிமன்றத்தை நாடின. கடந்த 1962-ம் ஆண்டில், பிரியா விகார் கோயில் கம்போடியாவுக்கு சொந்தமானது என்று சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை ஏற்றுக் கொள்ளாத தாய்லாந்து, இந்த கோயில் தங்கள் நாட்டுக்கு சொந்தமானது என்று இன்றுவரை கூறி வருகிறது.

தாய்லாந்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தா முயென் தாம், தா முயென் டோட், தா குவாய் ஆகிய 3 இந்து கோயில்கள் உள்ளன. இவை 12-ம் நூற்றாண்டு கோயில்கள் ஆகும். எல்லைப் பகுதியில் உள்ள இந்த கோயில்களை கம்போடியா சொந்தம் கொண்டாடி வருகிறது.

இந்த சூழலில் கடந்த 24-ம் தேதி தா முயென் தாம் கோயில் வளாகத்தில் கம்போடிய ராணுவத்தின் ட்ரோன்கள் பறந்ததாகவும், கம்போடிய ராணுவ வீரர்கள் கோயிலை நோக்கி முன்னேறியதாகவும் கூறப்படுகிறது. இதன்காரணமாக தாய்லாந்து, கம்போடிய ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் மிகக் கடுமையான பீரங்கி தாக்குதலில் ஈடுபட்டனர்.

கடந்த 25-ம் தேதி தாய்லாந்து, கம்போடியா எல்லையின் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் மோதல் வெடித்தது. கம்போடியாவின் 7 இடங்களை குறிவைத்து தாய்லாந்து போர் விமானங்கள் குண்டுகளை வீசின. இதில் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். மூன்றாவது நாளாக இருநாடுகளுக்கும் இடையே நேற்றும் அதிதீவிரமாக போர் நடைபெற்றது.

கடந்த 3 நாட்கள் போரில் தாய்லாந்தில் 6 ராணுவ வீரர்கள், 14 பொதுமக்கள் என 20 பேர் உயிரிழந்துள்ளனர். கம்போடியாவில் 5 ராணுவ வீரர்கள், 8 பொதுமக்கள் என 13 பேர் உயிரிழந்துள்ளனர். இரு நாடுகளில் இதுவரை 33 பேர் உயிரிழந்து உள்ளனர். இருதரப்பிலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். எல்லைப் பகுதிகளில் வசித்த லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து உள்ளனர்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்: போர் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் நியூயார்க்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தாய்லாந்து, கம்போடியா இடையே ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. மலேசியாவின் சமரசத்தின்பேரில் கடந்த வெள்ளிக்கிழமை சண்டை நிறுத்தம் அமல் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தாய்லாந்து ராணுவம் போர் நிறுத்தத்தை மீறி செயல்படுவதாக கம்போடியா குற்றம் சாட்டி உள்ளது. தற்போதைய நிலையில் இரு நாடுகள் இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது.

அமெரிக்கா, சீனா மறைமுக போர் – சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் கூறியதாவது: அமெரிக்க ஆதரவு நாடான தாய்லாந்துக்கும் சீன ஆதரவு நாடான கம்போடியாவுக்கும் இடையே போர் மூண்டு உள்ளது. ராணுவ பலத்தை ஒப்பிடும்போது தாய்லாந்து மிகவும் வலுவாக இருக்கிறது. அமெரிக்காவின் எப்16 போர் விமானங்கள் உட்பட அதிநவீன ஆயுதங்கள் அந்த நாட்டிடம் உள்ளன. ஆனால் கம்போடியாவிடம் போர் விமானங்களே கிடையாது. சீன தயாரிப்பு ட்ரோன்கள் மற்றும் சீன, ரஷ்ய தயாரிப்பு பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை அந்த நாடு பயன்படுத்தி வருகிறது.

தற்போது கம்போடியாவின் சிகனுவோக்வில்லே பகுதியில் உள்ள கடற்படை தளத்தை சீன ராணுவம் புதுப்பித்து கொடுத்துள்ளது. அங்கு சீன போர்க்கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டு உள்ளன. மேலும் கம்போடியாவின் அங்கோர் சர்வதேச விமான நிலையம், தலைநகர் நாம்பென்னில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை சீன நிறுவனங்கள் புதுப்பித்து கொடுத்துள்ளன. இந்த விமான நிலையங்களை சீன தரப்பு ராணுவ பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. சுருக்கமாக சொல்வதென்றால் தாய்லாந்து, கம்போடியா இடையே நடைபெறும் போர், அமெரிக்கா, சீனா இடையிலான மறைமுக போர் ஆகும். இவ்வாறு சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles