” மலையக மக்களுக்கு தலைவர் திகாம்பரம் நல்ல தீர்வை பெற்றுக்கொடுப்பார். அடுத்த தேர்தலில் சஜித்தின் வெற்றி உறுதி. அதன்பின்னர் அமையும் அரசாங்கம் ஊடாக மலையகத்தில் நிச்சயம் மறுமலர்ச்சி ஏற்படும்.” -என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் பா.சிவநேசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ 2015 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது , தமிழ் முற்போக்கு கூட்டணியினர் எமது மக்களுக்கு 7 பேர்ச்சஸ் கானியும், தனி வீடு திட்டமும் தந்தால் மாத்திரமே உங்களுக்கு ஆதரவு தருவோம் என்ற ஒப்பந்தத்துடன் மைத்திரிக்கு ஆதரவை வழங்கினர்.
இவ்வாறு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய மலையக மக்களுக்கு 7 பேர்ச்சஸ் நிலமும் தனி வீட்டு திட்டமும் கையளிக்கப்பட்டுள்ளது. ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சி மற்றும் ஆட்சிமாற்றம் என்பன இடம்பெறாதிருந்திருந்தால் நிச்சயம் திட்டங்களை முழுமைப்படுத்தி இருப்போம்.
சஜித் பிரேமதாசவுக்கும், எமது மக்களை சிறு தேயிலை தோட்ட உரிமையாளராக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்திலயே ஆதரவை வழங்குகின்றனர்.
எமக்கு தேயிலை தோட்டத்தை பிரித்து கொடுத்தால் நாம் சம்பளத்திற்கு போராட தேவையில்லை, கங்காணி தேவையில்லை, தோட்ட துரைமாருக்கு கும்பிடு போடவும் தேவையில்லை, சந்தா பணம் கட்ட தேவையில்லை ,அரசியல் வாதிகளின் நாடகத்திற்கு ஏமாற தேவையில்லை.
மலையக உறவுகளே எதிர்காலத்ததை பற்றி சிந்தியுங்கள், எமது தாய் தந்தை இரத்தம் வேர்வை சிந்தி காட்டை தோட்டமாக்கிய எமது நிலம் எமக்கு சொந்தமாக வேண்டும்.
நாம் படித்து அரசாங்கவேலை கிடைத்தவுடன் தோட்டத்தை விட்டு வெளியேறும் நிலை மாற வேண்டும். எமது நிலத்திற்கு நாம் முதலாளியாக வேண்டும் இதுவே திகாம்பரத்தின் கனவு. நிச்சயமாக இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் தலைமையில் ஆட்சி மலரும். அதில் எமது தலைவர் திகாம்பரம் முக்கிய பதவி வகிப்பார். எனவே, மலையகத்தில் மாற்றம் உறுதி. எமது நிலம் எமக்கு சொந்தமாக வேண்டும். இதற்காக நாம் அரசியல் ரீதியாக ஒன்றுபட வேண்டும்.” – என்றார்.
