தெற்காசியாவில் போதைப் பொருள் விநியோக மையமாக பாகிஸ்தான்?

தெற்காசியாவில் போதைப் பொருள் விநியோக மையமாக பாகிஸ்தான்?
போதையில் சிக்கித் தவிக்கும் இலங்கை!

இலங்கையில் போதைப் பொருள் பாவனை தற்போது மிக மோசமாக வியாபித்துள்ளது. போதைப் பொருள் பயன்படுத்துபவர்களைப் பார்த்தால் இதன் கொடூரத்தைப் புரிந்துகொள்ள முடியும். போதைப் பொருள் பயன்படுத்த பழகிய ஒருவரின் வாழ்க்கை என்பது கொடுமையானது. இதில் கொடுமையிலும் கொடுமை இந்தப் போதைப் பொருள் பாடசாலைகளுக்குள் நுழைந்திருப்பதுதான். ஆம். இலங்கையில் இந்த கொடுமை நடந்துள்ளது. மிக மோசமாக பாடசாலை மாணவ, மாணவிகள் இலக்குவைக்கப்பட்டு போதைப் பொருள் விநியோகம் நடத்தப்படுவதாக அண்மைக்காலங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன. முன்னதாக வடக்கு, மலையகம் ஆகிய பிரதேசங்களை மையப்படுத்தி, இந்த போதைப் பொருள் விநியோகம் அதிகமாக இருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனாலும், அண்மைக்காலமாக தெற்கில் இந்த நிலைமை மோசமாகியுள்ளது.

குறிப்பாக மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் வியாபாரிகள் தமது வியாபாரத்தை விஸ்தரித்துள்ளனர். பாடசாலைகளுக்கு அண்மித்த பிரதேசங்களில் மிகவும் சூட்சமான முறையில் பாடசாலை மாணவர்களிடையே இந்தப் பழக்கத்தை திட்டமிட்டு பரப்பியுள்ளனர். இதில் பல மாணவர்கள் சிக்கித் தவித்துள்ளனர்.

பாடசாலை மாணவர்கள் மட்டத்தில் போதைப்பொருள் பாவனை மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் தொடர்பாக பொலிஸ் திணைக்களத்திற்கு கிடைத்த தகவல்களின் பிரகாரம், மேல் மாகாணத்தில் கொழும்பு மாவட்ட பாடசாலைகளில் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

மேல் மாகாணத்தில் மட்டும், 230,982 மாணவர்கள் ஹெரோயின்,கஞ்சா, போதை மாத்திரை, போதைப்பொருள் மற்றும் மதுபானங்கள் பாவனைக்கு உட்படுத்துவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஏனைய மாவட்டத்துடன் ஒப்பிடுகையில் இந்த தொகை அதிகமாகும். எனவே குறித்த மாணவர்களை இலக்காக கொண்டு போதைப் பொருள் பாவனையில் இருந்து குறித்த மாணவர்களை பாதுகாப்பதற்காக தடுப்பூசி வழங்க வேண்டியுள்ளதாக அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பாடசாலை வளாகத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனை போன்ற நடவடிக்கைகள் இடம் பெற்றால் அது தொடர்பில் பொலிஸ் திணைக்களத்திற்கு தகவல் வழங்குவதற்கு 0777128128 என்ற துரித தொலைபேசி இலக்கமும் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது.

இலங்கைக்கு எங்கிருந்து போதைப் பொருள் வருகிறது?

உலக நாடுகளுக்கு, மூன்று வழித்தடங்கள் வழியாகவே, ஹெராயின் போதைப் பொருள் கடத்தப்படுகிறது. மத்திய ஆசிய நாடுகளில் இருந்து ரஷ்யா வழியாகவும், தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஈரான் வழியாகவும் கடத்தப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

தெற்காசியாவில் இந்தியாவுக்கு பாகிஸ்தான் வழியாக, ஹெராயின் கடத்தப்படுகிறது. டில்லி, மும்பை, பஞ்சாப் மாநிலத்தின் பல நகரங்களில், ஹெராயின் புழக்கம் அதிகம் உள்ளது. இந்த மாநிலங்களுக்கு, பாகிஸ்தான் எல்லை, வட கிழக்கு மாநிலங்களான மிசோரம் மற்றும் மணிப்பூர் வழியாக, ஹெராயின் கடத்தி வரப்படுவதாக இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பாகிஸ்தானில் இருந்து போதைப் பொருள் கடத்தப்படுவதை உறுதிசெய்துகொண்ட அதிகாரிகள் 24 மணி நேரமும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இருந்தாலும், அதிகாரிகளின் கண்களில் மண்ணை துாவி, போதைப் பொருட்கள், இந்தியாவிற்குள் கடத்தி வரப்படுவதாக கூறப்படுகிறது.

போதைப் பொருள் உற்பத்தியின் பின்னணி!

ஹெராயின் போதைப் பொருளை தயாரிக்கத் தேவையான செடிகள், ஆப்கன், மியான்மர் நாடுகளில் தான் வளர்க்கப்படுகின்றன. தலிபான் பயங்கரவாதிகள், ஆயுதங்கள் வாங்க, போதைப் பொருள் கடத்தலைத் தான், நம்பியிருக்கின்றனர். இதற்காக இவர்கள், ஆசியுடன், அந்த நாட்டில், ஆறு லட்சம் ஏக்கரில், ‘ஓபியம்’ என்ற செடி, பயிரிடப்படுகிறது. இதை அறிந்த சர்வதேச நாடுகள், மேற்கொண்ட முயற்சியால், 2018 ல், ஓபியம் பயிரிடப்படும் நிலத்தின் பரப்பு, 5 லட்சம் ஏக்கராக குறைக்கப்பட்டுள்ளது. அதுபோல, மியான்மர் நாட்டில், 80 ஆயிரம் ஏக்கரில், ஓபியம் பயிரிடப்படுகிறது. அங்குள்ள உள்நாட்டு தீவிரவாதிகள், சர்வதேச பயங்கரவாதிகளுடன் இணைந்து, மியான்மரிலிருந்து, ஹெராயினை, பிற நாடுகளுக்கு கடத்துகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் தயாரிக்கப்பட்ட போதைப்பொருள், பின்னர் பாகிஸ்தானுக்கு கடத்தப்படுவதாகவும், அது பின்னர் பாகிஸ்தானின் – பஞ்சாப் மாகாணத்துக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து இந்தியாவின் பஞ்சாப் பகுதிக்கு பாரவூர்திகளின் மூலம் கடத்தப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. இதன் பின்னர் அவை, நாட்டின் பிற பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன. இதில் பெரும்பாலானவை தமிழகம் இராமநாதபுரத்திற்குள் எடுத்துவரப்படுகின்றன.

இராமநாதபுரம் இலங்கைக்கு அருகில் அமைந்துள்ளமையால், இதுவே இலங்கைக்கு போதைப்பொருளை கடத்தும் முக்கிய கடல் இணைப்பாக மாறியுள்ளது என்று இந்தியா ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இலங்கையில் பயன்படுத்தப்படும் போதைப் பொருள் என்பது நூற்றில் ஒரு வீதம் கூட இல்லை என்றும், இலங்கை கடல்பிராந்தியத்தை மையப்படுத்தி பல்லாயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருள் விநியோகம் நடப்பதாகவும் போதைப் பொருள் குறித்து விசாரணை செய்யும் பெயர் குறிப்பிட விரும்பாத இலங்கை அதிகாரியொருவர் தெரிவித்திருந்தார்.

போதைப் பொருள் பயன்பாடு, விநியோகம் குறித்து தேடுவதும், அறிக்கையிடுவதும் ஆபத்தானது என்றும் ஊடகங்கள் கூட இதற்கு அஞ்சி நிற்பதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார். கடந்த காலங்களில் இதுபோன்ற செய்தி அறிக்கையிடல்களை வெளியிட்ட ஊடகவியலாளர்களுக்கும், ஊடக நிறுவனங்களுக்கும் வந்த அழுத்தங்களும், அச்சுறுத்தல்களும் எண்ணில் அடங்காதவை என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

போதைப் பொருள் வியாபாரம் என்பது கோடிகளைக் கொட்டித் தருவதால், இதற்கு எதிராக செயற்படும் எந்தவொரு நபரையும் பலிகொடுக்க போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள அரக்கர்கள் தயங்கமாட்டார்கள் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

போதைப் பொருள் பாவனையில் சிக்கியுள்ளவர்களை மீட்க அதீத கவனம் செலுத்தப்படுவதைப் போல, அந்தப் பாவனையில் எந்தவொரு தனிநபரும் விழுந்துவிடாமல் இருப்பதற்கான பணிகளையும் முன்னெடுக்க வேண்டும் என்றும் இது மிகக் கடுமையான பணி என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles