தேர்தல் தினத்தன்று சட்டம் கடுமையாக அமுலில் இருக்கும். எனவே, அனைத்து தரப்புகளும் தேர்தல் சட்ட திட்டங்களை முறையாக பின்பற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்னாயக்க தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு
‘ தேர்தல் தினத்தன்று சட்டத்தை முறையாக செயற்படுத்துமாறு பாதுகாப்பு தரப்புகளுக்கு உரிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தேவையேற்படின் களமிறக்குவதற்காக முப்படைகளும் தயார் நிலையில் உள்ளன.
காலையிலேயே வாக்களித்துவிடுங்கள். வாக்களித்த பின்னர் வீடுகளுக்குச் செல்லுங்கள். பொது இடங்களில் ஒன்றுகூடி தேர்தல் விதிமுறைகளைமீறும் வகையில் எவரும் செயற்படக்கூடாது.
தபால்மூல வாக்கெண்ணும் பணி மாலை 4.15 இற்கு ஆரம்பமாகும். 14 ஆம் திகதி நள்ளிரவுக்குள் முதலாவது தேர்தல் பெறுபேற்றை வெளியிட முடியும்.வாக்கு உங்கள் உரிமை, அதனை கட்டாயம் பயன்படுத்துங்கள்.
” – என்றார்.
