யாழ்ப்பாணம், வடமராட்சி, தொண்டைமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர்த் திருவிழாவில் கலந்துகொண்டிருந்த பக்தர்களின் சுமார் 35 பவுண் தங்க நகைகள் அபகரிக்கப்பட்டுள்ளன.
வரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்தத் தேர்த் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பெருந்திரளான பக்தர்கள் ஆலயத்துக்கு வருகை தந்து தேர்த் திருவிழாவை நேரில் கண்டு களித்தனர்.
அதன்போது ஆலயச் சூழல்களில் சனநெரிசல்களைப் பயன்படுத்தித் திருடர்கள் தம் கைவரிசைகளைக் காட்டியுள்ளனர்.
பல பக்தர்களின் பெறுமதியான தங்க நகைகள் அபகரிக்கப்பட்டுள்ளன. தமக்குக் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் சுமார் 35 பவுண் நகைகள் அபகரிக்கப்பட்டுள்ளன என்று வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்துள்னர்.
