பதுளை கந்தேகெதர சார்ணியா தோட்டத்தின் மாத்தன்னை பிரிவு தோட்டத் தொழிலாளர்கள் கடந்த நான்காம் திகதி மேற்கொண்டிருந்த வேலை நிறுத்த போராட்டம் கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமாரின் தலையீட்டையடுத்து முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இதேவேளை ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் குறித்த தோட்ட தலைவர்க ளையும் இணைத்துக் கொண்டதான பிறிதொரு பேச்சுவார்த்தை இடம்பெற இருப்பதாக இராஜாங்க அமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மாத்தன்னை தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கும் நடைமுறைச் சிக்கல்களுக்கும் முகம் கொடுத்து வருவதாகவும் அவற்றுக்கு தீர்வு வேண்டும் எனக் கோரியும் கடந்த நான்காம் திகதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் தமது பிரச்சினைகள் தொடர்பில் ஐக்கிய மக்கள் முன்னணி மற்றும் ஐக்கிய தொழிலாளர் முன்னணி ஆகியவற்றின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான அருணாச்சலம் அரவிந்தகுமாரின் கவனத்துக்கும் கொண்டு வந்திருந்தனர்.
இதனையடுத்து இவ்விடயத்தை ஆராய்ந்த கல்வி இராஜாங்க அமைச்சர், தனது ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் பேரில் ஐக்கிய தொழிலாளர் முன்னணியின் தேசிய அமைப்பாளர் எஸ் ஆனந்தராஜா பாபுவை குறித்த தோட்டத்துக்கு அனுப்பி வைத்திருந்தார்.
மாத்தன்னை தோட்டத்துக்கு சென்ற ஆனந்தராஜா பாபு அங்கு தொழிலாளர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் மற்றும் அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்ததுடன் தோட்ட நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தையிலும் ஈடுபட்டிருந்தார்.
இந்த பேச்சு வார்த்தையில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் தொழிலாளர்கள் மேற்கொண்டிருந்த வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. எனினும் தொழிலாளர்களது மேலும் பல கோரிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து தீர்வு காண்பது சம்பந்தமாக மேற்படி தோட்ட கமிட்டி தலைவர்களையும் இணைத்துக்கொண்டு மேலும் ஒரு பேச்சு வார்த்தை இடம்பெறவிருப்பதாக அமைச்சரின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் கூறுகையில், பெருந்தோட்ட நிர்வாகங்களை பொறுத்தளவில் அவை இலாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயற்பட்டு வருகின்றன. மாறாக அந்த இலாபத்துக்கு பிரதான காரணர்களாக இருக்கும் தோட்டத் தொழிலாளர்களை சிறிதும் எண்ணிப் பார்ப்பதாக இல்லை. எதிர்காலத்தில் இத்தகைய நிலைமைகளை மாற்றியமைக்கும் சூழல் உருவாக்கப்படும் என்றார்.
