வார இறுதியில் நாட்டை முழுமையாக முடக்குவதற்கான எவ்விதமான தீர்மானமும் எட்டப்படவில்லை என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” புத்தாண்டுக்கு முன்னர் 150 -200 வரையான தொற்றாளர்களே அடையாளம் காணப்பட்டனர். எனினும், தற்போது எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புத்தாண்டு காலப்பகுதியில் ஒருசிலர் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் செயற்படுவதை காணமுடிந்தது. எனவே, சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டை முழுமையாக முடக்கும் தீர்மானம் இன்னும் எடுக்கப்படவில்லை. எனினும், வீண் பயணங்களைதவிர்த்து வீடுகளிலேயே இருக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். சுற்றுலா செல்லும் திட்டங்கள் இருந்தால் அதனை நிறுத்துங்கள்.
வைரஸ் பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் அந்த பகுதி தனிமைப்படுத்தப்படும். ” – என்றும் இராணுவத் தளபதி கோரிக்கை விடுத்தார்.
