“ ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு முயற்சி எடுக்கப்படுமானால் அது ஏற்புடைய நடவடிக்கை அல்ல. அந்த முயற்சி வெற்றியும் அளிக்காது.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பலப்படுத்துவதற்கான ‘தசபல சேனா’ வேலைத்திட்டம் வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் முழுவீச்சுடன் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. எமது கிராமிய தலைவர்கள் இதற்கான ஏற்பாடுகளை வெற்றிகரமாக செய்துவருகின்றனர்.
எந்தவொரு தேர்தல் நடத்தப்பட்டாலும் அதனை எதிர்கொள்வதற்கு எமது கட்சியும், ஆதரவாளர்களும் தயாராகவே இருக்கின்றோம்.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் பங்காளிக்கட்சிகளுடன் கலந்துரையாடி வெற்றி வேட்பாளரை அறிவிப்போம்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையும், தேர்தல் முறைமையும் பின்னிபிணைந்துள்ளன. இவை இரண்டும் மாற்றப்படுமானால் அது பற்றி பரிசீலிக்கலாம்.
ஆனால் ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கில் இதற்கான ஏற்பாடு இடம்பெறுமானால் அது நீதியான நடவடிக்கை அல்ல. அந்த நடவடிக்கை வெற்றியும் அளிக்காது. தற்போதைய சூழ்நிலையில் மக்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன.
அவற்றை மூடிமறைப்பதற்குகூட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை பற்றி பேசப்படலாம். மக்களின் பிரச்சினைகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.” – என்றார்.
