” சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் நிலந்த ஜயவர்தனவை பொலிஸ் சேவையில் இருந்து நீக்கியமை மட்டும் போதாது. அவருக்கு எதிராக வழக்கு தொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” – என்று கத்தோலிக்க ஆயர்பேரவையின் பேச்சாளர் ஜூட் கிறிசாந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தமது பொறுப்பை நிறைவேற்ற தவறிய நிலந்த ஜயவர்தனவை நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு நாம் 6 வருடங்களாக மூன்று அரசுகளிடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால் அவற்றை மேற்படி அரசுகள் கவனத்தில் எடுக்கவில்லை. மாறாக அவரை 6 ஆண்டுகள் சேவையில் தொடர்ந்தும் வைத்திருந்தன. இது பாரதூரமான தவறாகும்.
இந்நிலையில் நிலந்த ஜயவர்தன பொலிஸ் சேவையில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளார். மூன்று அரசுகள் செய்யாத விடயத்தை உரிய விசாரணைகளின் பிரகாரம் செய்த ஜனாதிபதிக்கு நன்றிகளை கூறிக்கொள்கின்றோம்.
நிலந்த ஜயவர்தனை சேவையில் இருந்து நீக்கிமட்டும் போதாது. அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட வேண்டும். ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையிலும் இப்பரிந்துரை உள்ளது. இந்த விடயத்தை செய்யுமாறு ஜனாதிபதி, பொலிஸ்மா அதிபர் மற்றும் சிஐடி பணிப்பாளர் ஆகியோரிடம் கேட்டுக்கொள்கின்றோம்.
நிலந்த ஜயவர்தனை சட்டத்தின் முன் நிறுத்தி விசாரணைகளை முன்னெடுத்தால், உயிரித்த ஞாயிறு தாக்குதல் பற்றி அவர் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தினாரா என்பது தெரியவரும். அதன்மூலம் தாக்குதல் சம்பவத்தின் அடி, முடி தெரியவரக்கூடும்.” – என்றார்.
