நீதித்துறையில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண்பதற்கு பாராளுமன்றம் தலையிடும் வகையில் அவசர விவாதம் ஒன்றை நடத்துமாறு எதிர்க்கட்சியினர் சபாநாயகரிடம் கோரியுள்ளனர்.
அதில் கூறப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு ,
நிலையியற் கட்டளை 19(1) இன் கீழ் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயமொன்றை விவாதிப்பதற்கான ஒத்திவைப்புவேளை பிரேரணையொன்றுக்கான கோரிக்கை.
தற்போது நீதித்துறையில் நிலவும் வெற்றிடங்கள் காரணமாக, அந்த நிறுவனங்களின் பணிகளை வினைத்திறனாகவும், சுயாதீனமாகவும், முறையான வகையிலும் மேற்கொள்வதில் கடுமையான நடைமுறைச் சிக்கல்கள் எழுந்துள்ளன. இதன் விளைவாக, வழக்குகள் தேங்குவதும் வழக்கு விசாரணைகள் தாமதமடைவதும் அதிகரித்துள்ளதுடன், மக்களுக்கு நீதியும் நியாயமும் உரிய காலத்தில் கிடைக்காதிருப்பது ஒரு குறிப்பிடத்தக்க நெருக்கடியாக மாறியுள்ளது. இந்தச் சூழ்நிலையானது நீதித்துறைக் கட்டமைப்பின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் மோசமாகப் பாதிப்பதுடன், இது படிப்படியாக ஒரு கடுமையான சமூகப் பிரச்சினையாக உருவெடுத்து வருகின்றது.
எனவே, இதனை மிகவும் அவசரமான மற்றும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய விடயமாகக் கருதி, நீதித்துறையில் நிலவும் வெற்றிடங்கள், வழக்குத் தாமதங்கள் மற்றும் அவற்றிற்குக் காரணமாக அமைந்துள்ள கட்டமைப்பு மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் குறித்து பாராளுமன்றத்தில் விவாதமொன்றை நடத்தி, அந்தப் பிரச்சினைகளுக்கு விரைவான மற்றும் பயனுள்ள தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு முன்மொழிகிறோம்.










