நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் போதைப் பொருள் சோதனை நடவடிக்கை நுவரெலியாவிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நுவரெலியா தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரேமலால் ஹொட்டியராச்சி தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (02) பொதுமக்கள் அதிகம் கூடும் நகர்புறங்களில் உள்ள இடங்கள் , வர்த்தக நிலையங்கள் மற்றும் நுவரெலியாவில் உள்ள 26 பாடசாலைகளுக்கு 500 மீட்டர் தூரத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களிலும் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
நுவரெலியா தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் எட்டு குழுக்கள் அடங்கிய பொலிஸ் அதிகாரிகள் இணைந்து மோப்ப நாய்களின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கையில் இறங்கினர்.

நாட்டில் மாணவர்களுக்கிடையே போதை பொருள் பாவனை அதிகரித்துள்ளமையினால் அதனை தடுக்கும் நோக்கில், நுவரெலியாவில் பாடசாலை ஆரம்பித்தவுடன் பாடசாலை மாணவர்களையும் சோதனையிடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் எனவும் –

போதை பொருள் வியாபாரிகள், போதைப்பொருள் பாவிப்பவர்கள் தொடர்பாக தகவல் அறிந்திருந்தால் உடனடியாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறியதருமாறும் போதை பொருள் வியாபரிகள் தொடர்பாக விழிப்பாக இருக்குமாறும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரேமலால் ஹொட்டியராச்சி மக்களிடம் கேட்டுகொண்டுள்ளார்.
நானுஓயா நிருபர்










