இலங்கை நிர்வாக சேவையின் மூத்த அதிகாரியான சுனில் கலகம அவர்கள், அனைத்து மதச் சடங்குகளிலும் கலந்து ஆசீர்வாதம் பெற்ற பின்னர் இன்று (10) பிற்பகல் பதுளை மாவட்டச் செயலாளர் அலுவலகத்தில் பதுளை மாவட்டச் செயலாளர் / மாவட்ட அரசாங்க அதிபராக தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
2000 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவையில் இணைந்த அவர், வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் உதவி பணிப்பாளராக தனது அரசுப் பணியை ஆரம்பித்தார்.
அதன் பின்னர் சட்டமும் ஒழுங்கும் அமைச்சில் உதவி செயலாளராகவும், குடிவரவு மற்றும் குடியகழ்வுத் திணைக்களத்தில் பிரதி கட்டுப்பாட்டாளராகவும், அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்தில் பிரதி தூதராகவும், இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தில் ஆலோசகராகவும், கொழும்பு மேலதிக மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும் பாராளுமன்றத்தில் மூத்த உதவி செயலாளராகவும், கொழும்பு மாநகர சபையில் நகரச் செயலாளராகவும், தெஹிவளை–கல்கிசை மாநகர சபையில் நகர ஆணையாளராகவும், அரசுத் தொழில் நிறுவனத் திணைக்களத்தில் மேலதிக பணிப்பாளர் நாயகமாகவும் உள்ளிட்ட பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து பசளை வள தொடர்பான இராஜாங்க அமைச்சில் நிர்வாக செயலாளராகவும், முதலீட்டு மேம்பாட்டு அமைச்சில் மேலதிக அபிவிருத்தி செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
பதுளை மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்கும் முன்பு, அவர் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் மேலதிக செயலாளராகவும் (அபிவிருத்தி) பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
– நடராஜா மலர்வேந்தன்
பசறை நிருபர்
