பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு கவிழ்ந்ததை தொடர்ந்து புதிய பிரதமராக நவாஸ் ஷெரீப்பின் தம்பியான ஷபாஸ் ஷெரீப் தெரிவு செய்யப்படுவார் தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் எந்த பிரதமரும் முழுப்பதவிக்காலமும் ஆட்சி அதிகாரம் செலுத்தியது இல்லை என்ற வரலாறுக்கு இம்ரான்கானும் விதிவிலக்கு இல்லை.
நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதை தற்காலிக சபாநாயகராக இருந்து சபையை வழிநடத்திய அயாஸ் சாதிக் அறிவித்ததைத் தொடர்ந்து அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் சூடு பிடித்தன.
அடுத்த பிரதமர் பதவிக்கு போட்டியிடுவோர் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) மதியம் 2 மணிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும், 3 மணிக்கு வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படும், திங்கட்கிழமை (இன்று) நாடாளுமன்றம் கூடி, புதிய பிரதமரை தேர்வு செய்யும் என்று அறிவிக்கப்பட்டது. முதலில் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் கூடும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் அது மதியம் 2 மணிக்கு கூடும் என அறிவிக்கப்பட்டது.
பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷபாஸ் ஷெரீப் (வயது 70), நாடாளுமன்ற செயலகத்தில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் சார்பில் அதன் துணைத்தலைவர் ஷா மக்மூத் குரேஷி வேட்பு மனுதாக்கல் செய்தார். இருவரது வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டன.
‘புதிய சகாப்தம் தொடங்குவோம்’
வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் நிருபர்களிடம் பேசிய ஷபாஸ் ஷெரீப் கூறியதாவது:-
தேசிய நல்லிணக்கம்தான் எனது முதன்மையாக இருக்கும். நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்திய பிறகு மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும். எதிர்க்கட்சி தலைவர்களுடன் கலந்து ஆலோசனை செய்து புதிய மந்திரிசபை அமைக்கப்படும். ஒரு புதிய சகாப்தம் தொடங்குவோம். பரஸ்பர மரியாதைக்குரிய கலாசாரத்தை நாட்டில் வளர்ப்போம்.
இந்தியாவுடன் அமைதியை விரும்புகிறோம். ஆனால் காஷ்மீர் பிரச்சினையை தீர்க்காமல், அது சாத்தியம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இன்று புதிய பிரதமர் தேர்வு
எனவே இன்று பிற்பகலில் கூடுகிற நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷபாஸ் ஷெரீப் வேட்பு மனு ஏற்கப்பட்ட நிலையில், இம்ரான்கான் கட்சி எம்.பி.க் கள் கூண்டோடு ராஜினாமா செய்யப்போவதாக அதன் மூத்த தலைவரும், முன்னாள் தகவல் துறை மந்திரியுமான பவாத் சவுத்ரி அறிவித்துள்ளார்.