2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தின் இரண்டாவது மதிப்பீடு (வரவுசெலவுத்திட்ட உரை) நிதி அமைச்சர் என்ற ரீதியில்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களினால் இன்று (17) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
இன்று மு.ப 10.30 மணிக்கு வரவுசெலவுத்திட்டத்துடன் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதியின் அலுவலகத்திலிருந்து பாரம்பரியத்திற்கு அமைய படைக்கல சேவிதர் அழைத்துவர சபா மண்டபத்திற்குள் வருகைதந்தார்.
இதனைத் தொடர்ந்து பி.ப 1.15 மணிவரை ஜனாதிபதி வரவுசெலவுத்திட்ட உரையை நிகழ்த்தினார்.
இதற்கு அமைய 2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் பெப்ரவரி நாளை 18ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை 22ஆம் திகதி சனிக்கிழமை உள்ளடங்கலாக ஏழு நாட்கள் இடம்பெறவுள்ளது.
அத்துடன் பெப்ரவரி 25ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
இதனைத் தொடர்ந்து நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் குறித்த குழுநிலை விவாதம் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை 4 சனிக்கிழமை நாட்கள் உள்ளடங்கலாக 19 நாட்கள் இடம்பெறவுள்ளன. இதற்கான வாக்கெடுப்பு மார்ச் 21ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு நடத்தப்படவுள்ளது.
இதற்கமைய நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான விவாதம் பெப்ரவரி 18ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
