ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, இராணுவத்துக்கு புதிய ஆயுதங்கள், தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்ப அமைப்புகளை வாங்குவதற்கு கூடுதல் நிதி ஒதுக்க இந்திய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கமைய துணை பட்ஜெட் மூலம் இந்திய நாணய மதிப்பில் 50 ஆயிரம் கோடி ரூபா கூடுதலாக ஒதுக்குவதற்கான திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்காக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒப்புதல் பெறப்படலாம். இந்த கூடுதல் நிதி ஒதுக்கீட்டின் மூலம், ஆயுதப்படைகளின் தேவைகள், அத்தியாவசிய கொள்முதல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான செலவுகள் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்காக இந்திய நாணய மதிப்பில் 6.81 லட்சம் கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட 9.53 சதவீதம் அதிகமாகும்.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, கடந்த 10 ஆண்டுகளில் பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்து ஒன்பது பயங்கரவாத முகாம்களை அழித்த இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களின் அதிரடி பாய்ச்சலை உலகுக்கு காட்டியது.