பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை கையளிப்பு!

கல்வி அமைச்சரான பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில், இதுவரை எதிர்க்கட்சியைச் சேர்ந்த சுமார் 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர் என்று எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

அதில் மேலும் பல உறுப்பினர்கள் கையொப்பமிடவுள்ளனர் என்றும் ஊடகங்களிடம் அவர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நேற்று நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்தக் கையொப்பமிடும் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.

இந்தப் பிரேரணை நாளை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசின் கல்விச் சீர்திருத்தங்கள் காரணமாக பிள்ளைகளின் கல்வியில் பாரிய பாதிப்புகள் ஏற்படுவதாகக் கூறி இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுகின்றது.

தற்போதைய கல்விப் பாடத்திட்ட மாற்றங்கள் மற்றும் நிர்வாகக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியே எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன என்று எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக மேலும் கூறினார்.

Related Articles

Latest Articles