பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பில் மொட்டு கட்சிக்குள் எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை. தற்போதைய பிரதமர் சிறப்பாக செயற்பட்டுவருகின்றார் – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” கட்சியைக் காட்டிக்கொடுத்துவிட்டு, அரசியல் ரீதியில் வங்குரோத்தடைந்துள்ள சன்ன ஜயசுமனவே, இப்படியொரு கருத்தை சமூகமயப்படுத்தினார். அதில் எவ்வித உண்மையும் இல்லை.
மஹிந்தவை பிரதமராக்க வேண்டுமென்றால் அதனை மக்கள் செய்வார்கள். கட்சிக்குள் அவருக்கு ஆதரவாளர்களும் உள்ளனர். எனினும், பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவது சம்பந்தமாக எவ்வித கலந்துரையாடலும் கட்சிக்குள் இடம்பெறவில்லை. தற்போதைய பிரதமருடன் எமக்கு சிறந்த நல்லுறவு உள்ளது.” – என்றார்.
