பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.
இதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, சர்வஜன அதிகாரம் உள்ளிட்ட எதிரணிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டமொன்றில் இது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் சுதந்திரமாக இடம்பெற வேண்டுமானால் பாதுகாப்பு பிரதி அமைச்சர் பதவி விலக வேண்டும் என எதிரணிகள் வலியுறுத்தின. எனினும், அவர் பதவி விலகவில்லை. இந்நிலையிலேயே அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் நடந்தபோது அருண ஜயசேகர, கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாக செயற்பட்டார் என எதிரணியினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.










