அதிகாரத்துக்காக பிள்ளையானின் கட்சியுடன் கூட்டு சேரும் நிலைக்கு தேசிய மக்கள் சக்தி வந்துவிட்டதென இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
‘மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 12 சபைகளில் 11 ஐ தேசிய மக்கள் சக்தி இழந்துள்ளது. எஞ்சிய ஒரு சபையிலும் அக்கட்சி மண்கவ்வும். அச்சபையிலும் நாமே ஆட்சியமைப்போம்.
பிள்ளையான் என்பவர் தற்போது சிறையில் உள்ளவர், உயிரித்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் மற்றும் ஏனைய கொலைக்குற்றங்களுக்காகவே அவர் சிறையில் உள்ளார்.
சபைகளில் ஆட்சியமைப்பதற்கு தமிழரசுக் கட்சிக்கு ஆதரவளிக்க பிள்ளையானின் கட்சி முன்வந்தது. எனினும், பிள்ளையானின் கட்சியுடன் கூட்டு சேரக்கூடாது என்பது எமது கட்சியின் கொள்கை.” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால் செங்கலடி பிரதேச சபையில் ஆட்சி அமைப்பதற்காக பிள்ளையானின் கட்சியுடன் தேசிய மக்கள் சக்தி கூட்டு சேர்ந்தது. மட்டக்களப்பு மாநகரசபையிலும் கூட்டு சேர்ந்தனர். ஆனால் தோல்வி கண்டனர்.
ஜனாதிபதி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் மேல் மட்ட உறுப்பினர்களுக்கு இது தெரியாமல் இருக்கலாம். மாவட்ட மட்டத்தில் உள்ளவர்கள் இப்படி செய்கின்றனர். களுவாஞ்சிக்குடியில் பிள்ளையான் கட்சியுடன் கைகோர்த்தனர்.”- என சாணக்கியன் எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.